Home / ehouse (page 7)

ehouse

உறவுகளின் இழப்பால்  உயிராயுதமாகத் துடித்தவள் – லெப்ரினன்ட் சாந்தா 

எமது புரட்சிகரத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இளமைக் காலத்தில் உற்ற உறவுகளை மறந்து ஒரு சராசரி மாந்தன் அனுபவிக்கும் அத்தனை இன்பங்களையும் துறந்து தாயகத்தின் மீது கொண்ட தீராத பற்றினாலும் அரசியல், சமூக அக்கறையினாலும் பெண் விடுதலை வேண்டியும் பல்லாயிரக்கணக்கான தமிழீழப் பெண் போராளிகள் எமது தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களுடன் இணைந்து, அவரின் தலைமையினையும் வழிகாட்டல்களையும் உளமார ஏற்றுப் போராடி தம்முயிரீந்து மாவீரர்களாகியுள்ளார்கள். அவ்வாறே லெப்ரினன்ட் சாந்தாவும் சிறீலங்கா இராணுவத்தினரின் கொடும் ஒடுக்குமுறைகளாலும், திட்டமிடப்பட்ட இனவழிப்பினாலும் தனது குடும்பமும் மக்களும் இன்னலடைவதைக் கண்டு அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், இந்த ஒடுக்குமுறைகளிலிருந்து எம் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் தமிழீழப் பெண் போராளியாக இணைந்து எம் தலைவன் காட்டிய திசையில் விடுதலைப் பற்றுடன் களமாடி, தமிழீழ மண்ணுக்காய் தனையீந்து மாவீரராகினார். தமிழீழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வலிகாமம் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வடலியடைப்பு எனும் அழகான ஊரிலே திரு.திருமதி அரியநாயகம் மண இணையருக்கு மூன்று அக்காக்கள் இரண்டு தங்கைகளுடன் நான்காவது செல்ல மகளாக 23.07.1969 அன்று “அனுலா” எனும் இயற்பெயருடன் லெப்ரினன்ட் சாந்தா அவர்கள் வந்துதித்தார். அனுலாவின் குடும்பத்தினரும் ஆரம்பகாலந்தொட்டு எமது போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்து முழுநேரப் பங்காளர்களாகச் செயற்பட்டு வந்தார்கள். ஆரம்பகாலங்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடமிருந்தும் பின்பு இந்திய வல்லாதிக்க இராணுவத்தினரிடமிருந்தும் எமது போராளிகளை மறைவாக வைத்திருந்து  உணவளித்து தமது பிள்ளைகள், உடன்பிறப்புகள் போல கருதி பாதுகாத்து வந்தனர். இதனாலும் அனுலாவிற்கு சிறுபராயத்திலிருந்தே எமது போராட்டத்தில் ஈடுபாடு ஏற்படத் தொடங்கியிருந்தது. லெப்ரினன்ட் சாந்தா வீரப்பிறப்பு 23.07.1970   –   வீரச்சாவு 10.11.1995 சங்கானை,  யாழ்.மாவட்டம்   அனுலா சிறுவயது முதல் கல்வி, விளையாட்டு என இரண்டிலும் சிறந்து விளங்கினார். அவர் ஆரம்பக் கல்வி முதல் க.பொ.த சாதாரணம் வரை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் தனது கல்வியைக் கற்று வந்தார். 1985 ஆம் ஆண்டில் அவர் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் அவரது குடும்பத்தினருக்கு யாரிற்குமே ஏற்படக் கூடாத பேரிழப்பு ஒன்று ஏற்பட்டது. ஆம், நெடுந்தீவில் மணமுடித்து அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மூத்த அக்காவும், அவரைப் பார்ப்பதற்குச் சென்ற இரண்டாவது அக்காவும்  திரும்பி தம் உறவுகளைக் காண நெடுந்தீவு மக்களின் வெளியுலகை அறிய ஓர் அன்பு இணைப்பாக இருந்த “குமுதினிப் படகில்” அழகாய் கரையொதுங்குவதற்கு ஆர்வமாக வந்து கொண்டிருந்தபோது, 15.05.1985 அன்று நெடுந்தீவுக்கும் புங்குடுதீவுக்கும் இடையில் நடுக்கடலில் வைத்து கண்ணாடி இழைப்படகில் கத்தி,கோடரி,சுடுகலன்களுடன் வந்த சிங்களக் கடற்படைக் காடையர்களினால்  குழந்தைகள், பெண்கள், முதியோர் என்ற வேறுபாடின்றிக் கொடூரமாகக் கதறக் கதற வெட்டியும் கொத்தியும் சுட்டும் கொல்லப்பட்டு திட்டமிடப்பட்ட  இனக்கொலை செய்யப்பட்டனர். இதில் அனுலாவின் இரு அக்காக்களுடன் சேர்த்து 36 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள பேரிவாதத்தின் இந்த நரபலிப்படுகொலையில் தனது உயிரிலும் மேலான தனது இரண்டு அக்காக்களை இழந்தமையானது அனுலாவின் மனதில் என்றும் ஆறாத வடுவாக புரையோடிப் போய் இருந்தது. இவ் ஆற்றொணாத் துன்ப நிகழ்வு நடந்த காலத்திலும் மனம் சோராது தனது கல்வியைக்  கைவிடாது வைராக்கியத்துடன் கற்று க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரக் கல்வியை மானிப்பாய் மகளிர் கல்லூரியில் 1988 வது அணியில் வர்த்தப் பிரிவில் தொடர்ந்தார். அவர் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது 1987-1988 காலப்பகுதியில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய வல்லாதிக்க இராணுவம் எம் ஈழ மண்ணிற்கு வந்து நரபலி வெறியாட்டம் ஆடியது. அந்தக் காலப்பகுதியில் இந்திய வல்லாதிக்கப் படையினரால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்த போதிலும் கற்றலின் மீதுள்ள ஈடுபாட்டினால் கல்வியினைத் தொடர்ந்து கற்று க.பொ.த உயர்தரத்தில் தோற்றிய போதும் அவரால் பல்கலைக்கழக நுழைவிற்கு ஏற்ற வகையில் புள்ளிகளைப் பெற முடியாமல் போனது. எனினும் அவர் மனந்தளராது தொடர்ந்து 1989 வது அணியில் கல்வி கற்று திரும்பவும் தோற்றி அதிலும் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றபோதிலும் அந்தக் காலப்பகுதியில் நிறைய தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டது போல் அனுலாவுக்கும் சிறிலங்கா பேரினவாத அரசின் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட கல்வியில் தரப்படுத்தல் சட்டத்தின் விளைவாக ஏற்பட்ட வெட்டுப்புள்ளி தொடர்பான சிக்கலால் பல்கலைக்கழக நுழைவிற்கு இரண்டு புள்ளிகள் போதாமல் இருந்து அந்த வாய்ப்பும் பறிபோனது. இந்நிகழ்வும் அவரது மனதில் ஆறாத வடுவாய் பதிந்து இருந்தது. 1990-1991 காலப்பகுதிகளில்  படிப்பினை முடித்து விட்டு வீட்டில் ஆண் மகவு இல்லாத குறையினைப் போக்கும் வண்ணம் தந்தையாருக்கு வேளாண்மை தொடர்பான அனைத்து வேலைகளுக்கும் உதவியாக இருந்து வந்தார். அத்துடன் சுதந்திரப்பறவை அமைப்பினருடன் சேர்ந்து துண்டறிக்கை விநியோகம் செய்தல், போராளிகளுக்கு உணவு சேகரித்து விநியோகம் செய்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்தார். மற்றபடி வீட்டில் ஓய்வாக இருந்த பொழுதுகளில்  இரு அக்காக்களின்  இழப்பு, பல்கலைக்கழகநுழைவு வாய்ப்பு பறிபோனமை போன்ற காரணங்களினால் அனுலாவின் மனமானது உலைக்களமாகக் கொதித்துக் கொண்டிருந்தது. அதனை ஆற்றுப்படுத்துவதற்கான வழியாக, முதன்மையாக தனது உடன் பிறந்த அக்காமாரை ஈவிரக்கமற்றுக் கொன்றொழித்த சிங்கள இராணுவக் காடையர்களைக் கருவறுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் எம் தலைவன் அணியில் 1991ஆம் ஆண்டுகால நடுப்பகுதியில் இணைந்து மகளிர் படையணியின் 19 வது பயிற்சி முகாமில் அடிப்படைப் பயிற்சியை முடித்துக்கொண்டு “சாந்தா” எனும் பெயர் சூட்டப்பட்டு போராளியாகினார். அங்கு அவரின் கல்வித் தகுதியடிப்படையில் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப்பகுதிக்கு உள்வாங்கப்பட்டார். எம் இனத்தைக் கருவறுக்கும் சிறிலங்கா இராணுவத்தினரை அழிக்க சண்டையணியில் இணைந்து செயற்படும் அவாவில் வந்த சாந்தாவிற்கு இது சிறிது மனத் தாங்கலாகத்தான் இருந்தது. ஆயினும் இயக்கம் சொல்வதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரைகுறை மனதோடு நிதித்துறை மகளிர் பிரிவுக்கு சென்றார். அங்கு கணக்காய்வு, கணக்கியல், பொருளியல் தொர்பான கற்கைநெறிகளையும் மேற்கொண்டு மேலும் ஆங்கிலமொழியினையும்  பயின்று தன் தகுதியை மேலும் வளர்த்துக் கொண்டதோடு நிதித்துறை வாணிபங்களுக்கான கணக்காய்வுப் பணியினையும் மேற்கொண்டார். நிதித்துறை மகளிர் பிரிவுக்கு வந்த சிறிது காலத்திலேயே அவரது நிருவாகத் திறன், பணிகளில் செய்நேர்த்தி, மற்றைய போராளிகளை அரவணைத்துக் கூட்டாக உழைக்கும் பாங்கு என்பன இனங்காணப்பட்டு மகளிர் படையணியின் சிறப்புத் தளபதியால் நிதித்துறை மகளிர் பிரிவுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அங்கு அத்தனை நிருவாக வேலைப்பளுவுக்குள்ளும் கணக்காய்வுப் பணியையும் திறம்பட மேற்கொண்டார். பின்பு 1993 ஆம் ஆண்டின் இறுதிக் காலப் பகுதிகளில்   நிதித்துறை மகளிர் பிரிவில் வடமராட்சிப் பகுதியில் ஆயப்பகுதி தொடங்கப்பட்டபோது லெப்.கேணல் வரதா அக்கா அவர்கள் நிதித்துறை மகளிருக்கான முழு நிருவாகப் பொறுப்பையும் ஏற்க, சாந்தா அக்கா அவர்கள் வடமராட்சிப் பகுதியில் ஆயப்பகுதிக்கான பொறுப்பையும் அந்தப் பகுதி வாணிபங்களுக்கான கணக்காய்வு அணியின் அணிப்பொறுப்பாளராகவும் செயற்பட்டார். சாந்தா அக்கா எப்போதும் ஏதோ ஒரு வைராக்கியத்துடன் இருப்பது போன்று இறுகிய முகத்துடன் கவலைதோய்ந்தவராகக் காணப்படுவார். ஆனால் எந்தக் கடினமான வேலையையும் மிகவும் எளிதாகச் செய்து முடிக்கும் திறன் அவரிடம் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பிடுங்குதல், முகாம் கிணறு வற்ற இறைத்து துப்பரவாக்குதல் போன்ற பணிகளை யாருடைய உதவியும் இன்றி தானே தனிய செய்து முடிப்பார். அவரது குணவியல்புகளைப் பொறுத்தவரை மிகவும் இரங்கும் மனப்பாங்கு உடையவர். சக போராளிகள் அனைவரையும் தனது கூடப்பிறந்த உடன்பிறப்புகளைப் போலவே நினைத்துப் பழகுவார். அதிலும் பெற்றோரின் தொடர்பற்று இருக்கும் போராளிகள் என்றால் அவர்களை ஒரு தாய் போன்று அரவணைத்துப் பார்த்துக்கொள்வார். அவரது  பெற்றோர் அவருக்கு உடைகள், பிறபொருட்கள் வாங்கி வரும்போது பெற்றோரின் தொடர்பற்று இருக்கும் போராளிகளுக்கும் சேர்த்து வாங்கி வருமாறு கோரிக்கை விடுத்து வாங்கிக் கொடுப்பார். அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் பழக விட்டு அவர்களுக்கு குடும்ப உறவுகள் இல்லாத குறையினைத் தீர்த்து வைப்பார். அவரது குடும்பத்தினரும் அனைத்துப் போராளிகளையும் தமது வீட்டுப்பிள்ளைகள் போன்றே நினைத்து உரிமையுடன் பழகுவர். சாந்தா அக்கா வீரச்சாவடைந்த பின்னரும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வருகை தரும் அனைத்துப் போராளிகளையும் தமது மகளைப் போன்றே/ உடன்பிறந்தவரைப் போன்றே உருவகித்து அன்புடன் பழகுவர். வன்னிப்பகுதியில் நாம் வசித்தபோது அவர்களினது வீடானது தொலைவிடங்களிற்குப் பணி நிமித்தம் சென்று வரும் அனைத்துப் போராளிகளுக்கும் தங்கி இளைப்பாறி தேநீர் அருந்தி உணவு உண்டு மகிழ்ந்த, ஒரு சொந்த வீடு போல் நினைக்கும் அளவிற்கு  “தாய்வீடாக” அமைந்தது என்றால் மிகையாகாது. சாந்தா அக்கா அவர்கள் வெளி நிருவாகப் பணிகளில் ஈடுபட்டிருந்த போதிலும் அவரின் மனதிலே கரும்புலிகள் அணியில் இணைந்து தனது குடும்ப உறவுகளைக் கொன்றொழித்த சிங்கள இராணுவத்தினரின் மீது உயிராயுதமாக பாய்ந்து கொன்றழிக்க வேண்டும் என்ற ஓர்மம் வைராக்கியமாக குடி கொண்டிருந்தது. இதன் காரணத்தினால் எமது தேசியத் தலைவர் அவர்களுக்கு ஐந்தாறு தடவைகளுக்கு மேலே தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பிருந்தார். ஆயினும் அவரின் பணியின் தேவைகருதி தேவை ஏற்படும் போது அழைப்பதாகவும் இப்போது தரப்பட்ட பணியினை மேற்கொள்ளுமாறும் ஒவ்வொரு தடவையும் தேசியத் தலைவர் அவர்களிடமிருந்து பதில் வந்தது. அதில் மனநிறைவடையாத சாந்தா அக்கா நிதித்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தியப்பா அவர்களுடன் அடிக்கடி சென்று நேரடியாகக் கதைத்து தனது கொள்கையில் வைராக்கியமாக இருந்து கடைசியில் சண்டையணிக்காவது செல்ல அனுமதி தருமாறு கேட்டு அனுமதி பெற்று 1994 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் மாலதி படையணிக்கு பிரிவு மாறிச் சென்றார். மாலதி படையணியில் களப்பயிற்சியினைப் பெற்று போர் முன்னரங்கப் பகுதிகளில் களப்பணிகளுக்கு உள்வாங்கப்பட்டார். பின்பு யாழ் நகரை முற்று முழுதாக தம் கைவசப்படுத்தும் நோக்கில் “இடிமுழக்கம்” என்ற பெயரில் எதிரி வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொண்டபோது அதனை முறியடிக்கும் சமரில் மாலதி படையணியினருடன் இணைந்து ஓர்மத்துடன் களமாடினார். பின்பு 17.10.1995 அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்கில் மீண்டும் தொடங்கப்பட்ட “சூரியக்கதிர்” நடவடிக்கையில் தனக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எதிரியை முன்னேற விடாது தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்றும் எமது மண் பறிபோகக் கூடாது என்றும் தனது குடும்ப உறவுகளைக் கொன்றொழித்த சிங்கள இராணுவத்தினரை அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணவுறுதியுடன் ஓர்மத்துடனும் வைராக்கியத்துடனும் போராடி 10.11.1995 அன்று சுதந்திர தமிழீழம் எனும் கனவை நெஞ்சில் சுமந்து தான் விட்டுச் சென்ற கனவை மற்றைய போராளிகள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தன்னுயிரீந்து லெப்ரினன்ட் சாந்தாவாக வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். லெப்ரினன்ட் சாந்தா அக்கா போன்ற பல்லாயிரக்கணக்கான மானமாவீரர்களின் சுதந்திர தமிழீழம் எனும் கனவைத் தோளில் சுமந்து அவர்களின் தடம்பற்றி நடக்க வேண்டும் என நாமனைவரும் உறுதியேற்று எம்பணி தொடர்வதே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும். -நிலாதமிழ்.

Read More »

அண்ணன் அப்துல்லா வழியில் ஆகுதியான தங்கை திலகா

நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார். நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும். அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த ...

Read More »

வலிசுமந்த நினைவுகள் – புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான்

17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும் தன் கதிர் பரப்பி எழுந்து வந்தான். இரத்தமும், பிய்ந்து போன தசைத் துண்டுகளாகவும், வெடித்துச் சிதறுகின்ற இரும்புத் துண்டுகளாகவும் அழுது கொண்டிருந்தது நந்திக்கடல் விரிந்து கிடந்த அந்த பிரதேசம். திரும்பும் இடமெங்கும் அழுகுரல்கள். விட்டுப் ...

Read More »

உணர்வு மிக்க ஊடகவியலாளர் கப்டன் செல்லப்பா

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலனோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்திய காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட காலமாகும். இதில் சிலர் தங்களுடைய அர்பணிப்போடமைந்த முழுமையான பணியைச் செய்திருக்கின்றார்கள். இந்த வகையில் பார்க்கின்றபோது மட்டக்களப்பில் 1980 களில் பிரபல்யமான பத்திரிகையாளர்களில் ஒருவரான நித்தியானந்தன் அவர்களையும் முதன்மையாகக் குறிப்பிட முடியும். காலத்தால் அழியாத காவிநாயகர்கள் வரிசையில் மட்டு மண்ணில் பத்திரிகையாளானாக ...

Read More »

அன்புக்கு இலக்கணம் சங்கவி

அன்புக்கு இலக்கணம் ஆகிய அழகிய வதனம் கொண்ட சங்கவியை தெரிந்தவர்கள் யாராலும் மறக்கவே முடியாது…… அமைதியான சுபாபம் கொண்டவள். கூட இருப்பவர்களுக்கு உதவிடும் நல்ல உள்ளம் படைத்தவள். இரக்க குணம் அவளோடு கூட பிறந்தது. பழகியவர்களால் அவளை மறப்பது மிகவும் கடினம். 1998ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டவள் சிறுத்தைப் படையணியில் நித்திலா 1 பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்துக் கொண்டு மூன்றுமுறிப்பு ...

Read More »

மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசா

தேசியத் தலைவரால் சின்னத்தம்பி சிவமகாராசா மாமனிதராக மதிப்பளிப்பு. ஈழநாடு முதன்மைப் பணிப்பாளர் சின்னத்தப்பி சிவமகாராசாவுக்கு விடுதலைப் புலிகள் மாமனிதர் விருதி வழங்கி மதிப்பளித்துள்ளனர். சுயவாழ்வின் சுகபோகங்களைத் துறந்து, பொதுநல வாழ்வை இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.   தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 22.08.2006   சுயவாழ்வின் சுகபோகங்களைத் துறந்து, ...

Read More »

எத்தனையோ போராளிகளை வளர்த்து விட்ட ஒரு உன்னத போராளி லெப் கேணல் தமிழ்முரசு

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் 1998ம் ஆண்டில் விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து கொண்டவர்களில் ஒருவனாக இணைந்தவன் தான் தமிழ்முரசு. கரும்புலி லெப் கேணல் சுபேசன் அவர்கள் நினைவாக அவரது பெயரைச் சுமந்த பயிற்சி முகாமான சுபேசன் 02ல் பயிற்சி முடித்து கடற்புலிகளனியில் இணைக்கப்பட்டு மாவீரரான லெப் கேணல் தமிழன் அவர்கள் தலைமையில் செம்மலையில் கடற்புலிகளின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகள் பெற்று பயிற்சிகள் முடிவடைந்ததும்.விடுதலைப் புலிகளால் மேறகொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான ...

Read More »

கப்டன் சிறிமதி / சிறீமதி

அன்றைய நாள் மிகவும் சோகமாக விடிந்தது போலத் தோன்றியது. மனதில் ஏதேதோ நெருடல்கள். நெஞ்சம் கனத்தது. ஏனென்றே தெரியவில்லை, எதையோ இழந்துவிட்டதுபோல் தவிப்பு உண்டானது. சக போராளிகள் இருவர் வந்தனர். இவர்கள் முகங்களிலும் சோகம். காரணத்தை அறிய மனம் துடித்தது. “உங்கட றெயினிங் மாஸ்ரர் சிறீ மதியல்லோ வீரச்சாவு” “ஆ………..?  சிறீமதியக்காவோ ? எங்க ” “மணலாத்தில…………” நான் அழவும் முடியாமல், கதைக்கவும் முடியாமல், வாயடைத்துப் போனேன். சிறீமதி,  உறுதியும், ...

Read More »

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதிமுடக்கம் பற்றிய செய்தி

சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 1200 இற்கும் மேற்பட்டவர்களை பணியில் ஈடுபடுத்தி பல மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதிகளை சிறிலங்கா அரசு 2008 இல் முடக்கம் செய்திருந்தது. அதுபற்றிய நிறுவனத்தின் அறிக்கை வருமாறு: TRO_19_11_08 Tsunami Financial Report

Read More »

தென்தமிழீழ போராளிகளுடன் தலைவரின் நெருடலான சந்திப்பு!

போர் நிறுத்த உடன்பாடு செய்யப்பட்ட நிலையில் தென்தமிழீழத்திற்கு விடுமுறையில் செல்லும் போராளிகளை சந்தித்த தமிழீழத் தேசியத்தலைவர் பல கருத்துக்களை போராளிகளுடன் பரிமாறிக்கொண்டார். அவற்றில் முக்கியமானவை: 1. 18வயதும் அதற்கு மேற்பட்டவர்களே இயக்கத்தில் இணைக்கப்படவேண்டும். 2. தமிழ்பேசும் மக்களாகிய முஸ்லிம் மக்களுடன் பழைய சம்பவங்களை மறந்து நெருக்கமான உறவை பேணவேண்டும் 3. மாறிவரும் சர்வதேச உலகில் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக மாற்றிக்கொள்ளவேண்டும். தலைவர் மேதகு வே. பிரபாகரன் உரை from Karthick ...

Read More »