Home / ஆவணங்கள் / ஆவணங்கள் / திலீபம் – ஆவணப்பதிவுகள்

திலீபம் – ஆவணப்பதிவுகள்

பார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987 ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராவிருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.

ஐந்து அம்சக் கோரிக்கை

1. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறிலங்காவின் சிறைகளில் அல்லது தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.

2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3. இடைக்கால அரசு அமைக்கப்படும் வரை புனர்வாழ்வு எனும் பெயரில் நடத்தப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

4. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படல் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

5. இந்திய அமைதிப்படைகளின் மேற்பார்வையின் கீழ் ஊர்காவல் படைகளின் ஆயுதங்கள் மீளப்பெறப்படல் வேண்டும். பாடசாலை கட்டிடங்களில் உள்ள இராணுவம் வாபஸ் பெறப்படவேண்டும்.

பாடல் – பாடும் பறவைகள் வாருங்கள்

பாடல் – அணையாத தீபமாய் …

பாடல் – விழிகளில் பொழிவது அருவிகளா…

பாடல் – வெண்ணிலவாய் வாடா…

பாடல் – பாசமலர் ஒன்று வாடிக்கிடக்குதே

பாடல் – திலீபன் அழைப்பது சாவையா

பாடல் – நல்லைநகர் வீதியிலே

பாடல் – வெண்ணிலவாய் வாடா…

பாடல் – செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்

பாடல் – வாயிலொரு நீர்த்துளியும் ….

கவிதை – கவிஞர் காசி ஆனந்தன்

கவிதை – கவிஞர் புதுவை இரத்தினதுரை

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 1வது நாள் தியாகப் பயணம்

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 2வது நாள் தியாகப் பயணம்

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 3வது நாள் தியாகப் பயணம்

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 4வது நாள் தியாகப் பயணம்

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 5வது நாள் தியாகப் பயணம்

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 6வது நாள் தியாகப் பயணம்

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 7வது நாள் தியாகப் பயணம்

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 8வது நாள் தியாகப் பயணம்

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 9வது நாள் தியாகப் பயணம்

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 10வது நாள் தியாகப் பயணம்

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 11வது நாள் தியாகப் பயணம்

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் 12வது நாள் தியாகப் பயணம்

திலீபனின் முன்னைய பேச்சுகள்

 

தியாகி திலீபன் அவர்களின் மறைவையொட்டி தலைவர் பிரபாவின் உரை
(தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் மறைவையொட்டி அன்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் தமிழீழ மக்களுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனமான உரை அன்றும் இன்றும் என்றும் எமது விடுதலைக்கு நாம் தான் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதை வலியுறுத்தி நிற்கிறது.)

எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது; வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது; அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறது. இவை எல்லாம் எமது ஆயுதப் போராட்டவரலாற்றில் நாம் ஈட்டிய வீரசாதனைகள். ஆனால் எனது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது; வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. சாத்வீகப் போராட்டத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனிய வைத்த நிகழ்ச்சி. உலகத்தின் மனச்சாட்சியைச் சீண்டிவிட்ட நிகழ்ச்சி.

தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக, ஒருவன் எத்தகைய உயர்ந்த – உன்னதமான தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான்.

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.

நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதி வாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு. அவன் துடித்துத் துடித்துச் செத்துக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை சாதாரண மனிதப் பிறவியாகப் பார்க்கவில்லை. தன்னை எரித்துக்கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன். அதில் நான் பெருமை கொண்டேன். இலட்சிய உறுதியின் உச்சக் கட்டமாக திலீபன் தன்னை அழித்துக் கொண்டான். அவன் உண்மையிற் சாகவில்லை. காலத்தால் சாகாத வரலாற்றுப் புருசனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கிறது. இது அர்த்தமற்ற சாவு என இந்திய தூதர் கூறியிருக்கிறார். தமது உறுதி மொழிகளை நம்பியிருந்தால் திலீபன் உயிர் தப்பியிருப்பான் எனச் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன? என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எமது உரிமைகள் வழங்கப்படும், எமது மக்களுக்கும் மண்ணுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும், தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பூமியில் தம்மைத் தாமே ஆளும் வாய்ப்பு அளிக்கப்படும்- இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம். எமது மக்களினதும் மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.

இதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எனது மக்களாகிய உங்களுக்கு தெரியும்.

தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லமுடியாது முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க சிங்களக் குடியேற்றங்கள் துரித கதியில் தமிழ் மண்ணைக் கபளீகரம் செய்தது.சிங்கள அரசின் போலீஸ் நிர்வாகம் தமிழ்ப் பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டது.

அவசரம் அவசரமாக சிங்கள இனவாதம் தமிழ்ப் பகுதிகளில் ஊடுருவியது. சமாதான ஒப்பந்தம் என்கின்ற போர்வையில் சமாதானப் படையின் அனுசரணையுடன் சிங்கள அரச ஆதிக்கம் தமிழீழப் பகுதிகளில் நிலை கொள்ள முயன்றது.

இந்தப் பேராபத்தை உணர்ந்து கொண்ட திலீபன் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி காண திட சங்கற்பம் கொண்டான்.

சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. பாரதம் தான் எமது இனப் பிரச்சனையில் தலையிட்டது. பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதமளித்தது.பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம் தான் எமது ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்தது. ஆகவே பாரத அரசிடம் தான் நாம் உரிமை கோரிப் போராட வேண்டும். எனவே தான் பாரதத்துடன் தர்ம யுத்தம் ஒன்றைத் தொடுத்தான் திலீபன். அத்தோடு பாரத்ததின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அஹிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டான்.

முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் விடுதலைப் புலி வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வடக்கு கிழக்கு அடங்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் புலிகள் முன்னெடுக்கும் இந்த சாத்வீகப் போராட்டத்தில் அணி திரள வேண்டும் மக்களின் ஒன்று திரண்ட சக்தி மூலமே – மக்களின் ஒருமுகப்பட்ட எழுச்சி மூலமே – எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். திலீபனின் ஈடு இணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இது தான்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

புத்தகங்கள்
திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்
தியாக திலீபம்
திலீபம்

 

ஊரெழுவில் பூத்தகொடி

 

யாழ் மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் அழகிய பனைமரங்கள் கொஞ்சி விளையாடும் கிராமத்தில் ஆசிரியர் திரு. இராசையா தம்பதிகளின் கடைசி மகனாகப் பிறந்த பார்த்திபன் வாழ்வின் ஆரம்பத்திலேயே மிகவும் துர்ப்பாக்கியசாலியாக இருந்துவிட்டார். பத்துமாதம்வரை அன்புப்பால் ஊட்டி சீராட்டி பாராட்டி வளர்த்த அன்னையின் அரவணைப்பை பத்தாவது மாதம் முடிவில் பறிகொடுத்துவிட்டார் திலீபன். பிஞ்சுக்கால்களை ஊன்றி அந்தக் குழந்தை தத்தித்தத்தி நடக்கவேண்டிய பருவத்தை கொஞ்சி மகிழ்;ந்த அன்னை நெஞ்சில் மகிழ்வோடு பார்க்கமுடியாமல் பரலோகம் போய்விட்டார்.

தாய் இறந்தபோது அக்குடும்பத்தின் மூத்த மகனான இளங்கோவிற்கு வயது ஒன்பது மட்டுமே. பெண்குழந்தைகள் இல்லாத காரணத்தாலும் இளங்கோ சிறுவயதுப் பையன் என்பதாலும் பார்த்திபனின் தந்தை இராசையா ஒரு பள்ளி ஆசிரியர் என்பதாலும் குழந்தை பார்த்திபனைக் கவனிக்க வீட்டில் யாரும் இல்லை.
ஊரெழுவில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள கரந்தன் என்ற சிற்றூரில் பார்த்திபனின் அம்மாவின் தாயும் சிறியதாயான செல்வி இராசலட்சுமியும் வசித்துவந்தனர். பார்த்திபனின் பாட்டி வயதானவர் என்பதால் அவரின் சிறிய தாயாரான செல்வி. இராசலெட்சுமியிடம் பார்த்திபனைக் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தார் இராசையா அவர்கள்.

பிஞ்சுப்பருவத்தில் அன்னையை இழந்த பார்த்திபன் சிற்றன்னையின் அணைப்பில் வளரத் தொடங்கினார். இராசையா ஆசிரியரும் பார்த்திபனின் சகோதரர்களும் ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் பார்த்திபனைப் பார்த்துவிட்டு வருவார்கள். அவருக்கு ஒன்றரை வயதான போது சகோதரர்கள் அல்லது தகப்பன் அவரைப் பார்க்கவரும்போது தானும் அவர்களுடன் வரப்போவதாகக் காலைக் கட்டிக்கொண்டு அழுவார். அடம்பிடிப்பார். ஆனால் அவருக்கு இரண்டு வயதான போது அவரை ஒரேயடியாக வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டார் தந்தை.
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் தான் படிப்பித்துக்கொண்டிருக்கும்போது கைக்குழந்தையையும் கூடவே அழைத்துச் செல்வார் தந்தை.

மூன்று வயதில் அவனை உரும்பிராயில் இருந்த பாலர் பாடசாலை ஒன்றில் தந்தையார் சேர்த்துவிட்டார். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திற்கு மிக அண்மையிலேயே இப்பள்ளி இருந்தது. பாலர் பாடசாலை முடிந்ததும் அப்பாடசாலைக்கு முன்பாக உள்ள பலசரக்குக் கடையில் தகப்பனுக்காகக் காத்துக்கொண்டிருப்பார் பார்த்திபன். உரும்பிராய் விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள அந்தப் பலசரக்குக் கடை முதலாளி பார்த்திபனுக்காகத் தினமும் இனிப்பு வழங்குவார்.

அவர் வளர வளர அவரால் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் பிரச்சனைகள் குறைய ஆரம்பித்தன. தன்வேலைகள் தானே கவனிக்கும் பக்குவத்தை அவர் மிகச்சிறுவயதிலேயே பெற்றுவிட்டார்.
பாலர் கல்வியை முடித்துக்கொண்ட பார்த்திபனை தான் கல்விகற்பித்துக்கொண்டிருந்த உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திலேயே ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்காக சேர்த்துவிட்டார்.

சில வருடங்களின் பின் தந்தை இராசையாவிற்கு இடம்மாற்றம் வந்தது. அவர் உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டார். தனித்து நின்ற பார்த்திபனையும் அங்கேயே கொண்டுபோய்ச்சேர்த்துவிட்டார். சிறுவயதிலேயே அவர் படிப்பில் புலியாக விளங்கினார். ஐந்தாhம் வகுப்பு மட்டும் முதலாவதாகவே வந்தார். ஒருவருடத்தில் படித்து முடிக்க வேண்டிய பாடங்களை எல்லாம் இரண்டு மூன்று நாட்களில் இரவுபகலாக இருந்து வாசித்துமுடித்துவிடுவார். சின்னவயதில் இருந்தே அறிஞர்களின் நூல்களை விரும்பி வாசிக்கத் தொடங்கினார். சிறுவயதிலேயே அவருக்கு ஆஸ்த்துமா வியாதி இருந்தது. குளிரில் மூச்சுவிட முடியாமல் திணறுவார். அடிக்கடி அவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வார் தந்தை.

சிறுவயதில் இருந்தே வானொலிப்பெட்டியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு கிரிக்கட் கொமன்றி கேட்பதில் பார்த்திபனுக்கு அதிக விருப்பம் இருந்தது. சில சமயம் சாப்பாட்டில் கூட அக்கறையின்றி அதைக் கேட்டுக்கொண்டு இருப்பார். ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். ஒரே தடவையில் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்தார். அப்போது இரவு பகலாக ஓய்வு உறக்கம் இன்றி படித்ததன்காரணமாக அவரது கண்கள் பாதிக்கப்பட்டன. அப்போது யாழ் ஆஸ்பத்திரியில் கண்வைத்திய நிபுணராக டாக்டர். திருமதி கண்ணுத்துரையிடம் அவர் சிகிச்சை பெற்றார். அவர் ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் படிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியது மட்டுமன்றி கண்களுக்கு கண்ணாடியையும் சிபாரிசு செய்தார். அதிலிருந்துதான் அவர் கண்ணாடி அணியத் தொடங்கினார். இதன் காரணமாக முதலாம் தடவையில் அவரால் க.பொ.த உயர்தரவகுப்பில் சித்தியடைய முடியாமல் போய்விட்டது. இரண்டாம் தடவை திறமையாகச் சித்தியடைந்த அவருக்கு யாழ் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவனாகப் படிப்பதற்கு அழைப்பு வந்தது. அதை ஏற்க மறுத்து விடுதலைப் போராட்டத்தில் குதிக்க அவர் முடிவு செய்தார்.
1974ம் ஆண்டு தை மாதம் யாழ்நகரில் நடைபெற்ற நாலாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். ஆனால் தமிழ் இனத்தின் துரோகி ஒருவரின் கட்டளை மூலம் ஒன்பது அப்பாவித்தமிழர்கள் அங்கு அவர் கண்முன்னால் கொல்லப்பட்டதைக் கண்டு பார்த்திபனின் இதயம் துடிதுடித்தது.
தமிழன் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற விடுதலைத்தாகம் அந்தச் சிறுவயதில் அவர் நெஞ்சில் நெருப்பாகப் பற்றத்தொடங்கியது.

யாழ் இந்துவில் பயிலும்போது படிப்பிலும் விளையாட்டிலும் மிகவும் திறமைசாலியாக விளங்கினான். விளையாட்டுத்துறையின் தலைவனாகவும் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தார். 1977ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தில் யாழ்ப்பாணம் நோக்கி வந்த தமிழ் அகதிகளுக்கு தன்னாhல் முடிந்த உதவிகளைச் செய்தார். அப்போது அவருக்கு வயது 13. அந்த இனக்கலவரம் திலீபனின் நெஞ்சில் சுதந்திர தாகத்தை வெகுவாகக் குழப்பத்தொடங்கியது. அந்த வயதிலேயே விடுதலைப்புலிகளின் அதிரடித்தாக்குதல்களை மானசீகமாக மகிழ்ச்சி ததும்ப வரவேற்றார் திலீபன்.

தமிழ்த் துரோகி துரையப்பா கொலை செய்யப்பட்டபோது ஆனந்தக் கூத்தாடியவன் திலீபன். தமிழ் மக்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டு அவர் மனம் தவித்தது. தமிழ் மக்களைக் காப்பதற்காக தன் உயர்கல்வியை உதறித்தள்ளிய திலீபன் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து தமிழ் மண்ணுக்காகப் போராடத் தீர்மானித்தார். தமிழ் மக்களைக் காப்பதற்காக அல்லும் பகலும் போராடிக்கொண்டிருந்த தமிழ் இனத்தின் தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரனுடன் எப்போதாவது இணையவேண்டும் என்பதே அவரின் கனவாகவும் இலட்சியமாகவும் இருந்தது. தலைவர் பிரபாவை தன் மானசீகக் குருவாக வைத்துக்கொண்ட பார்த்திபன் 1983ம் ஆண்டு தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் அங்கத்தவனாகச் சேர்ந்தான். ஆரம்பத்தில் கப்டன் பண்டிதருடன் இணைந்து பிரச்சார வேலைகளைக் கவனித்துவந்த அவர் பின் மானிப்பாய் வட்டுக்கோட்டைப் பகுதிப் பிரச்சாரப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1983ம் ஆண்டின் கடைசிப்பகுதியில் தமிழ்ப்பகுதியில் பிரச்சார வேலைகளில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளுக்கு தலைக்கு மேல் ஆபத்து இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆபத்து இராணுவத்திடம் இருந்து மட்டுமல்ல வேறு பல வழிகளிலும் உண்டு. இவைகளை எல்லாம் எதிர்நீச்சல் போட்டு தன் பணியில் வெற்றி கண்டவர் திலீபன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்பிராந்தியத் தளபதியாகக் கடமையாற்றிய திரு. கிட்டு அண்ணா திலீபனின் செயல்திறனிலும் அயராத முயற்சியிலும் நம்பிக்கை வைத்தார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு உறுதி உழைப்பு எல்லாவற்றிலுமே திறமையாகத் திகழ்ந்த திலீபன் அவர்களை தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ்மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளனாக நியமிக்கும்படி தலைவர் பிரபாவிடம் பரிந்துரை செய்தார் கிட்டு. திலீபன் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டபின் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாயிற்று.

திலீபன் தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காக அல்லும் பகலும் உழைத்த அதே வேளை தளபதி கிட்டுவுடன் இணைந்து பல தாக்குதல் திட்டங்களையும் வகுத்தார்.
அநேகத் தாக்குதல்களில் தானே நேரடியாக ஆயுதம் ஏந்திப் போராடினார்.
பலமுறை இராணுவத்திடம் பிடிபட்டுத் தப்பினார். வல்வையில் ஏற்பட்ட விடுதலைப்புலிகள்- இராணுவ நேரடி மோதல் ஒன்றில் வயிற்றில் குண்டுபாய்ந்து சத்திரசிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டார்.
‘களத்தில்” என்ற மாதப்பத்திரிகை நடத்தி தன் எண்ணங்களை எழுத்துருவில் வடித்தார். இயக்கக் கொள்கைகளை மிகஎளிதாக மக்களுக்கு விளங்கவைத்தார். கட்டுரைகளை எழுதும் போது அது மக்களுக்குப் புரியக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருப்பார். திலீபனின் முயற்சியினால் பல உப அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பண்ணையில் விளைந்து அதிக பலனைக் கொடுக்கத் தொடங்கின. அவற்றில் சில:
1. தமிழீழ விடுதலைப்புலிகளின் மாணவர் இயக்கம்
2. தமிழீழ மகளிர் அமைப்பு
3. சுதந்திரப்பறவைகள் அமைப்பு
4. தமிழீழத் தேசபக்தர் அமைப்பு
5. தமிழீழ விழிப்புக்குழுக்கள்
6. கிராமியநீதிமன்றங்கள்
7. சுதேச உற்பத்திக்குழுக்கள்
8. தமிழீழ ஒளி ஒலி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை
9. தமிழர் கலாச்சார அவை
மற்றும் சில தொழிற்சங்கங்களும் திலீபனால் அமைக்கப்பட்டு மிகத்திறமையாக செயற்பட்டு வந்தன.

 

தியாகி திலீபன் தான் மரணமடைவதற்கு முன்னதாக போராளி ஒருவரிடம் எழுதிக்கொடுத்து, அதனை தனது இறுதி வீரவணக்க நிகழ்வில் வாசிக்கச் சொன்ன கடிதம்

 

 

 

 

About ehouse

Check Also

பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்

2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி ...

Leave a Reply