Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / கப்டன் உமையாளன்

கப்டன் உமையாளன்

2006 மார்கழி 4 ஆம் நாள், நீயும் நானும் சந்தித்த முதல் நாள். நீ உயரமானவன் என்பதால் அந்த கல்லூரியின் பின்வரிசையையே ஆக்கிரமிப்பாய். முதன்நாளிலும் அப்படித்தான். மெல்லிய நீல கோடு போட்ட சேட் என்று நினைக்கிறேன். உன் புன்னகையை ஒரு தடவை பார்த்துவிட்டு முன்னாலே புரொஜெக்டரின் ஊடக வெளிவந்து வெண்ணிற திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த கற்றலுக்கான எழுத்துக்களை பார்த்தேன். முதல் நாள் எந்த அறிமுகமும் இல்லை. மணிவண்ணன் உன் பெயர் என்பதை மட்டுமே அறிந்தேன்.
நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது. எம் கல்லூரி நாட்கள் இனிமையாக கழிந்தது. நீ கல்வியில் ஒரு படி மேலே இருந்தாய். உன் சிந்தனை முழுவதும், உன் இலக்கு முழுவதும் ஒரே ஒரு விடயத்தில் தான் குவிந்து நின்றது. அந்த பாடத்திட்டத்தின் ஒவ்வொரு நிலைகளையும் சிறப்பாக கற்றுத் தேற வேண்டும். அந்த நோக்கத்தில் மட்டுமே உன் ஒவ்வொரு வினாடிகளையும் நீ செதுக்கிக் கொண்டாய்.
கேணல் சார்ள்ஸ் அண்ணாவின் வீரச்சாவு நிகழ்வில் நீ வரி உடையுடன் வருவதை கண்ட எம்மில் பலருக்கு அதிர்ச்சி. நீ ஒரு போராளியா என்ற அங்கலாய்ப்பு. அதுவரைக்கும் நீ ஒரு போராளி என்பதை எம்மில் ஒரிருவரைத் தவிர மற்றவர்கள் அறிந்திருக்கவில்லை. அன்று எல்லோருக்கும் தெரிந்தது நீ காக்கும் உன்னை பற்றிய இரகசியத்தின் தன்மை.
படையப்புலனாய்வின் பணிகளை விரிவாக்கும் செயற்றிட்டம் ஒன்றுக்காக நீ கற்க வந்திருந்தாய். வெளிமாவட்டத்தில் தங்கி இருக்கும் இரகசிய போராளிகளுக்கான தொடர்பாடல்களை ஏற்படுத்துவது தொடர்பாக ஒரு மென்பொருளை உருவாக்க நீ முனைந்தாய். இரகசிய போராளிகள் பற்றிய இரகசிய விபரக்கோவைகளை பாதுகாக்கும் மென்பொருளையும் உருவாக்க முனைந்தாய். நிச்சயமாக அவை மட்டுமல்ல அதை விட நிறைய மென்பொருள்களை உருவாக்கி இருக்க வாய்பிருந்திருக்கும். இருப்பினும் அவற்றின் முழு விபரங்களை நான் அறிந்திருக்கவில்லை.
கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் ஒன்றாக இருந்தோம். அந்த உயர் தொழில்நுட்பக்கற்கை முடிந்து அவரவர் பணிகளுக்கு திரும்ப முந்திய பொழுதொன்றில் உன் உயிரொன்றையும் எமக்கு அறிமுகப்படுத்திவிட்டு நீ உன் பணிக்குத் திரும்பிவிட்டாய்.
காலம் நகர்ந்து தொலைந்தது. 2008 ஐப்பசித்திங்கள் நாங்கள் கிளிநொச்சியில் இருந்து நகர்ந்து விசுவமடுவில் எமது கல்லூரியை அமைத்தோம். நீ படையகப்புலனாய்வின் படையணியில் ஒருவனாகி விட்டாய். நிர்வாக வேலைகள் குறைந்து களமுனை உன்னை அழைத்துக்கொண்டது. உன் கரங்கள் நீ விரும்பிய ஆயுதத்தை வெளிப்படையாக பற்றிக்கொண்டது.
நாங்கள் நடைப்பிணங்களாக நடந்து கொண்டிருக்க நீ உன் அணியோடு எதிரியை மறித்து முறியடிப்புச்சமரை செய்து கொண்டிருந்தாய். சுதந்திரபுரத்தில் என் வீட்டுக்கு திடீர் ஒன்று ஒருநாள் வந்தாய். அது உன் உயிரின் சந்திப்புக்கான நாளென்று நான் நினைக்கிறேன். ஏதேதோ எல்லாம் கதைத்துக்கொண்டிருந்தாய். பாணும் சம்பலும் சாப்பிட்டாய். “அம்மா இது தான் உங்கட கையால சாப்பிடுற கடைசிச்சாப்பாடோ தெரியாது” சொல்லிவிட்டு அம்மாவிடம் முறையான திட்டையும் வாங்கியபடி சென்று விட்டாய்.
உன்னை அதன் பின் சந்தித்தது நீ காயப்பட்டு சில நாட்கள் மருத்துவ ஓய்வுக்காக வந்து இரட்டைவாய்க்காலில் நின்ற போது. இருவரும் நீண்ட நாட்களின் பின் கிணற்றடியில் ஒன்றாக குளித்தோம். பழைய கதைகள் கதைத்தோம். சிரித்தோம் கவலைப்பட்டோம். மீண்டும் பிரிந்துவிட்டோம். நீ களமுனை நோக்கி நான் கடற்கரையில் இருந்த என் தறப்பாள் கொட்டகை நோக்கி.
திடீர் என்று ஒரு நாள். எங்கள் நண்பன் சசி வந்தான். நீ ஒரு அணியை வழிநடாத்தியபடி எதிரியின் எல்லை தாண்டி உள்நுழைய முற்பட்ட போது சிங்கள வல்லாதிக்கப்படைகளின் சினைப்பர் அணியால் தாக்கப்பட்டதாய் கூறினான். நீ உள்நுழைந்தது பாதை ஏற்படுத்திய உடனே உள்நுழைய காத்திருந்த தன் அணியை பின்நகருமாறு கட்டளை வந்ததால் தான் மீண்டு விட்டதாகவும் கூறினான். அவன் கண்கள் கலங்கின. பழகிய நாட்கள் நெஞ்சுக்குள் குருதியோட்டத்தை அதிகரிக்க வைத்து இதயத்துடிப்பு அதிகரித்தது.
உன்னை எப்படியாவது இறுதியாகப் பார்த்துவிட துடித்து இருவரும் இரட்டைவாய்க்கால் துயிலுமில்லம் ஓடி வந்தோம். ஆனால் உன்னை காணமுடியவில்லை. அவர்கள் விதைத்துவிட்டார்கள். உறவினர்கள் யாரும் இல்லை. ஆனால் அதை தாண்டி நண்பர்கள் நாங்கள் அருகில் இருந்தோம். உனக்காக அழ உன்னை நேசித்தவர்கள் இருந்தோம். எமக்காக உயிர் ஈந்த உயிர் தோழனே உன்னை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏக்கத்தோடு வந்தவருக்கு நீ வேறு நண்பர்களினால் விதைக்கப்பட்டுவிட்டாய் என் செய்தி மட்டுமே கிடைத்தது.
உன் விதைகுழியின் மேல் விழியில் இருந்த வழிந்த நீரை படையலாக்க மட்டுமே எங்களால் முடிந்தது. நீ படைக்கத் துடித்த தமிழீழத்துக்காக நீ விதையாகிவிட நாமோ உன் கனவுகளை முள்ளிவாய்க்காலில் புதைத்துவிட்டு ஏதிலியாகிவிட்டோம்.
நண்பனே…!
சேர்ந்திருந்த நாட்கள் கொஞ்சம் எனிலும் நினைவுகள் ஏராளமடா.
அருகில் இருந்தும் உன் திருமுகத்தை பார்க்க முடியாத வேதனையோடு உன் விதைகுழியில் ஒரு பிடி மண்ணைப் போட்டு இறுதி வழியனுப்பலை செய்ய முடியாத துயரத்தோடு…
இ.இ.கவிமகன்
நாள்: 22.11.2025
மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

லெப்ரினன்ற் கேணல் புதியவன் மாஸ்டர்

புதியவன் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகநேசன் என இயற்பெயர் கொண்ட புதியவன் என்ற மாவீரரின் போராட்ட ...

Leave a Reply