லெப் கேணல் ரஞ்சன் 1983ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து இறுதிப்போர் வரை களமாடிய ஓர் மூத்த போராளி ஆவார். ஆகாய கடல் வெளி நடவடிக்கை, தவளைப் பாச்சல் நடவடிக்கை, வெற்றியுறுதி எதிர்ச்சமர், ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை என தமிழீழத்தின் புகழ்பூத்த பல்வேறு சமர்க்களங்களில் தன் தடம் பதித்து திறமையாக களமாடியவர். லெப் கேணல் குணா அவர்களின் சிறந்த நண்பனுங்கூட. இவர் முள்ளிவாய்க்காலில் 07.04.2009 அன்று லெப் கேணல் றஞ்சன் ஆக விழிமூடினார்.
வலது புறத்தில் இருப்பவர் லெப் கேணல் றஞ்சன் அவர்களின் தம்பி குயிலன் ஆவர். இவர் திறமையான குறிசாடுநர் (marksman) ஆவார். ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் திறமையாக சமராடினார். இவர் கட்டம் 3இல் கட்டைக்காடு-புல்லாவெளி சமரின்போது நீரினுள்ளால் நடந்து வரும் காட்சி ‘ஓயாத அலைகள் மூன்று-03 கட்டம்-03’ ஆவணக் காட்சியில் இடம்பெற்றுள்ளது (கையில் வானைநோக்கி பார்த்தபடி G3 குறிசாடு துமுக்கியுடன் நடந்து செல்வது). இக் குறிசூட்டுநர் இறுதிப்போரில் 13/05/2009 அன்று முள்ளிவாய்க்காலில் லெப் கேணல் குயிலனாக விழிமூடினார்.
லெப். கேணல் றஞ்சனின் இரண்டாவது தம்பியாரும் ஒரு மாவீரரே. அவருடைய பெயர் மேஜர் அருள்தேவன்(அருண்) ஆகும். அவர் தமிழீழப் புலனாய்வுத்துறையில் பணிபுரிந்து வீரச்சாவடைந்தார். அவருடைய மனைவி புலிகளின் குரல் சிங்கள மொழிச் சேவையில் செய்திவாசிப்பவராக பணிபுரிந்தார். அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இவர்களின் இருவரின் நிழற்படங்களும் கிடைக்கப்பெறவில்லை!
தமிழீழக் காற்றோடு கலந்த இம்மூன்று மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம்.
மேலதிக விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து தொடர்புகொள்ளவும்
மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com