Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / கரும்புலி லெப் -கேணல் பிருதுவி / நற்புகழ்

கரும்புலி லெப் -கேணல் பிருதுவி / நற்புகழ்

தமிழீழ விடுதலைப்போரட்டத்தின் இக்கட்டான சூழல்கள் பலவற்றை மாற்றியமைத்து விடுதலைப்பயணத்தின் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிகளுக்கு வழிசமைத்துக் கொடுத்த தற்காப்புக்கவசங்கள் தற்கொடைப் போரளிகள். கரும்புலிகள் எங்கள் காவலர்கள். கரும்புலிப் படையணிகள் காலத்தை வென்று நிற்கும் பெரும்பலத்தின் தோன்றல்கள் ஈகத்தின் விளக்கமே இவர்கள் தானென்றால் அது மிகையாகாது –

கரும்புலிகள் ஒவ்வொருவரினதும் உள்ளக்கிடக்கைகளை ஒட்டுமொத்தமாய் உள்ளாய்ந்து உணர்ந்து அறிந்தவர் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள்தான்.உறுதியையும் தெளிவையும் தலைவரிடம் கற்றுக்கொண்டு உரிமையையும் உறவையும் அவரிடமே பெற்றுக்கொண்டு ஊருலகமறியாது உயரிய தியாக வடிவங்களாக ஒளிர்கின்ற கரும்புலிக்காவியர்கள் கற்பனைகளைக் கடந்துநிற்கும் விற்பன்னர்கள் .

அழகு மாணிக்கங்களாய் அல்ல அத்திவாரக் கற்களாய் மிளிர்கின்றார்கள் கரும்புலிப் போராளிகள் என்று தெரியாமலே அவர்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் பல எமக்கும் கிடைத்திருக்கின்றன . நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தி வாழும் அருமையான நாட்கள் கிடைத்திருக்கின்றன. அதுகூட ஒரு பெரும் பேறுதானென்றே நான் கருதுகின்றேன். அந்த வகையில் கரும்புலி லெப் கேணல் -பிருதுவி / நற்புகழ் என்னும் போராளி நடந்த தடங்களைத் திரும்பிப் பார்க்க விளைகிறேன் :

பலோரோடு நாம் பழகினாலும் சிலபேர் எம்மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றனர் . பிருதுவியும் அவ்வாறான மறக்கமுடியாத ஒருத்திதான் : மிகச்சிறந்த பண்புகளால் அனைவரையும் தன்பால் ஈர்த்துக் கொள்பவள். அமைதியான சுபாவம், அன்பான செயல்கள், கனிவான பேச்சு, பணிவான பக்குவம், சிரித்தபடியே எத்தனை கடினமான பணிகளையும் ஏற்றுச் செய்வது, இப்படி அந்தப் பட்டியல் இன்னும் நீளும்.

போராளிகள் என்றாலே தமது வாழ்வையும் பொருட்படுத்தாது பிறருக்காகாக வாழவும் , மக்களுக்காகப் போராடவும் தலைப் பட்டவர்கள்தான். அதிவேகமான செயற்பாடுகளாலும் சாதனைகளாலும் போர்த்திறனாலும் அறியப்படுபவர்களென்றால் அதற்கு எடுத்துக்கட்டாய்த் திகழ்பவள் பிருதுவி. 1980 ம் ஆண்டு கிளிநொச்சி மண்ணில் பிறப்பெடுத்த பிருதுவிக்கு பெற்றோர் இட்ட பெயர் “தியாகதேவி “. அந்தப்பெயரின் வடிவம் அவளேயானாள் என்பதே சாலப்பொருந்தியது.

இரு சகோதரர்களின் இடையே பிறந்த ஒரே பெண்பிள்ளை என்பதால் செல்லமாகவே வளர்ந்து வந்தாள். சிறுவயதிலே அதிக கெட்டித் தனங்களைத் தன்வசம் வைத்திருந்த சுட்டிப்பெண் .

1996 ம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்விப்பொது சாதாரண தரத்தில் கற்றுக் கொண்டிருந்த மாணவி நற்புகழை எமது தேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைச்சம்பவங்கள் வெகுவாகப் பாதித்தது. அத்தோடு தமிழீழ விடுதலைப்போர் வேகமெடுத்திருந்தது, விமானத்தாக்குதக்ல்கள், எறிகணை வீச்சுகள், மக்களின் அன்றாட வாழ்வை கேள்விக் குறியாக்கிக்கொண்டிருந்தன.

தான் பிறந்த தாய்நாட்டின் மேல் அளவற்ற பற்றுக் கொண்டிருந்தாள். ஒவ்வொருவருக்கும் தாய் மண்ணைக் காக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது எனும் கருத்தில் மிகத்தெளிவாக இருந்தால். கல்வியில் காட்டிய ஆர்வம் மேலாக இருந்தாலும், தானும் ஒரு போராளியாகி விடுதலைக்காய்ப் போராட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கவே அவள் உறுதியோடு புறப்பட்டாள்.

பெண்போராளிகளின் படையத் தொடக்கப் பயிற்ச்சிப் பாசறை” லீமா 4″ அவளை வரவேற்றது . கருப்பட்டமுறிப்பு காட்டுப்பகுதியில் அந்தப் பயிற்சி முகாம் மிக அழகாகவே அமைக்கப்பட்டிருந்தது. அங்கே தனது ஆரம்பப் பயிற்ச்சியை நிறைவு செய்தபோது தியாகதேவி “நற்புகழ் ” என்னும் பெயர் பெற்றிருந்தாள். லீமா 4 பயிற்சி அணியின் நிறைவு விழா நிகழ்விற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கும் கிடைத்திருந்தது .அன்றுதான் முதன்முதலில் நற்புகழ் என்னும் பிருதுவியை நான் பார்த்தேன் .

பல கலைநிகழ்வுகள் மேடையில் அரங்கேறிக் கொண்டிருந்தன .இடையிடையே பரிசில் வழங்கும் வைபவமும் இடம் பெற்றுக் கொண்டிருந்தது .எல்லா நிகழ்வுகளிலும் பிருதுவியை அடிக்கடி பார்க்ககூடியதாக இருந்தது. துரு துருவென எறும்பைப் போல சுறுசுறுப்பாய்த் தெரிந்தாள். அவ்வளவு போராளிகளிலும் தனியே தென்பட்ட அவளின் அழகைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை .

அப்போது அவளை அருகழைத்துப் பேசியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது . பயிற்சியை முடித்த குறுகிய காலப் பகுதியிலேயே நற்புகழ் சத்ஜெய இராணுவ நடவடிக்கை எதிர்சமரில் பங்கு கொண்டாள். ஆனையிறவிலிருந்து பரந்தனூடாக கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கோடு இலங்கை இராணுவம் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையே சத்ஜெய என்பது குறிப்பிடத்தக்கது .

தொடர்ந்து மாலதி படையணியில் ஒரு போராளியாக ஜெயசிக்குறு எதிற் சமரில் மிகத் திறமையாகச் செயற்ப் பட்டாள். அப்படியே ஓயாத அலைகள் 3 இல் களமிறங்கினாள். இவ்வாறே நற்புகழின் தாக்குதல் அனுபவம் விரிவுகண்டது .

இவளது ஆற்றல்களை இனங்கண்ட மாலதிபடையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா அக்கா, இவளை மேலதிக விசேட பயிற்சிக்காக (master’s training) அனுப்பிவைத்தார்.

படையணிகளை வழிநடத்தும் பொறுப்பாளர்களை உருவாக்கும் ஓர் பட்டறைதான் அப் பயிற்சித்தளம். அங்கே பயிற்சித்திட்டங்கள் கடுமையானதாக இருப்பதோடு, பலரகப்பட்ட ஆயுதங்களைக் கையாள்வது பற்றியும் எதிரிகளின் தாக்குதல் நகர்வுகளை முறியடித்தல் , முகாம் தகர்புக்கள் எனப் பல்வேறு போர் தொடர்பான கற்பித்தற் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்ற. ஒரு பட்டறையாகவே விளங்கும் அத்தளத்தில் நற்புகழ் தனது மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தினாள். அங்கே பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை இடம்பெற்ற தவறுதலான வெடி விபத்தில் அவளது வலது காலில் பெரிய காயம் ஒன்று ஏற்பட்டது . இதன் விளைவாக அவளால் பயிற்சியைத் தொடரமுடியவில்லை .காயம் குணமடைய சிலமாதங்களானது. அதன்பின்னர் ஊன்றுகோலின் உதவியுடனேயே அவள் நடக்கவேண்டியிருந்தது .

இவ்வேளை இவளின் பணி மாற்றங்கண்டது .அத்தோடு நற்புகழ் என்னும் அவளது பெயர் பிருதுவியாகியது .தமிழீழ விடுதலைப் புலிகளின் ராஜன் கல்விப்பிரிவுக்கு கற்கை நெறிக்காக அனுப்பிவைக்கப்பட்டாள் பிருதுவி .அரசியல், பொது அறிவு, உலகவியல், போர்க்கலை போன்ற விடயங்களைக் கற்றுத் தேர்ந்து வித்தகியாகத் திகழ்ந்தாள்.

இவளின் அசாத்தியத் திறமைகளுக்காய் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களிடமிருந்து பரிசில்களைப் பெற்றுக் கொண்டாள் .அனைத்துப் படையணிகள் மட்டத்தில் நடந்த பொதுஅறிவுப் போட்டியில் முதலிடம் பெற்றுக் கொண்டதற்காகவும், சிறந்த குறிபார்த்துச் சூட்டாளினியாய் வெற்றி பெற்றதற்காகவும் அவள் அப் பரிசில்களைப் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாது ராஜன் கல்விப்பிரிவின் 2வருட கற்கை நெறியை சிறப்பாக பூர்த்தி செய்ததற்கான சான்றிதழையும் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டாள்.

பிருதுவியின் முகத்தில் எப்போதுமே ஒரு புன்னகை இழையோடிக்கொண்டிருக்கும். கண்களில் குறும்புத்தனம் பளிச்சிடும் அதே நேரம் பார்வையில் தெளிவும் வெளிப்படும். படையணியின் ஒன்றுகூடல்கள், தலைவர் சந்திப்பு நிகழ்வுகள் போன்றவைகளில் மேடையேறும் பட்டிமன்றங்கள், கவியரங்குகள், நாடகங்கள் முதலியவற்றில் தூள்கிளப்புவாள் பிருதுவி.

அவள் ஊன்றுகோலை ஊன்றி நடப்பதும், புன்னகையோடு பேசுவதும் எங்கள் அரசியற் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணாவையே நினைவுபடுத்தும். அதனால் நாங்கள் அவளை புன்னகை மன்னி என்றும் தமிழ்ச் செல்வன் அண்ணாவின் தங்கச்சி என்றும் நக்கலடிப்போம். தோற்றத்தில் அவள் எடுப்பாகவும் எழிலாகவும் காணப்படுவதால் “பொறுப்பாளர் “என்று நான் அவளை அழைப்பதுண்டு .

எடுத்த செயலை நேர்த்தியாகச் செய்யும் கலை இவளுக்கேயுரியது .அதனால் தலைவர் அவர்களால் நேசிக்கப்படுகின்ற பாராட்டப்படுகின்ற பிள்ளைகளில் (அப்படித்தான் தலைவர் பெண்போராளிகளை அழைப்பார் )இவளும் ஒருத்தியானாள். பிரிக்கேடியர் விதுசாவுக்கும் மிகவும் பிடித்தமானவள் மட்டுமல்ல இவளோடு பழகும் அனைவருக்கும் இவள் விருப்பத்திற்குரியவளே .

மேலும் இவளது கற்பித்தற் பணி விரிவடைந்தது. மகளீரின் அனைத்துப் படையணிகளுக்கும் அரசியல், இராணுவ போர்த்தந்திரங்கள் தொடர்பான வகுப்புக்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பணிக்கப்பட்டாள். இவளின் நீண்டகனவு தன்னையும் கரும்புலியணியில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்பது . 2002ம் ஆண்டளவில் அதற்க்கான விருப்பத்தைத் தெரிவித்து அனுமதி வேண்டி தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினாள் பிருதுவி . இதற்குரிய அனுமதி 2008ம் ஆண்டிலேயே அவளுக்குக் கிடைத்தது . தமிழீழம் ஒன்றே உயிர் மூச்சாய் கொண்ட அவள் கரும்புலிப் படையனியில் ஒருத்தியாகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.

தனது உயிரைக்கொடுக்கத்தானே நேரம் குறிக்கக் காத்திருந்தாள். 30 வருடங்களுக்கு மேலான சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழின அழிப்பின் உச்ச அவலம் 2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் கட்டுக்கடங்காது போனது . நாலாபுறத்திலும் எறிகணைகளைப் பொழிந்தபடியும், விமானத்தாக்குதல்களை நடத்தியபடியும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை உபயோகித்தவாறும், துப்பாக்கிச் சூடுகளை சரமாரியாக நடத்திக்கொண்டும் இராணுவம் நகர்ந்து வந்தது .

நிமிடத்துக்கு நிமிடம் தமிழரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சுடுகாடாய்த் தோற்றம் பெற்றது வன்னிப்பெருநிலம் . இவ்வேளை மக்கள் முற்றுகையிடப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள் இன்னும் பலர் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வாழ்வோடும் சாவோடும் போராடும் மக்களைக் காக்க விடுதலைப் போராளிகள் தம்மாலான எதிர்சமரை மேற்கொண்ட வண்ணமிருந்தனர் .

இவ்வாறே மூங்கிலாறு ஊடாக உடையார்கட்டை நோக்கி முன்னேறிவந்த இலங்கைப் படையணிகளிடம் மாட்டிகொண்ட மக்களில் பெண்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு கொடூரமான பாலியற் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள் . நிர்கதியான அவர்களைக் காப்பற்ற கிருஸ்ணபரமாத்துமா வரப்போவதில்லையே .. அச்சமயம் பிருதுவி தனது கடமையை நிறை வேற்றத் தயாரானாள்.தானும் ஒரு சாதாரண பெண்ணைப்போலவே இராணுவத்தினரிடம் சரணடைந்தாள். கூட்டமாய் நின்ற அந்த மிருகங்களிடையே தன்னை வெடிக்கச் செய்தாள்.

அதன்மூலம் நுற்றுக் கணக்கான இராணுவ வெறியர்கள் கொன்றொழிக்கப் பட்டதுமல்லாது பெண்களை நெருங்குவதற்கு முயலும் அவர்களிடத்தே பேரச்சத்தை விளைவித்தாள் பிருதுவி என்னும் தியாகதேவி .

இச்சம்பவமானது வெளிவராத ஒரு வீரத்தின் மகுடம். துளியேனும் அச்சமின்றி தமிழீழ விடிவிற்காய் வெடிசுமந்து சென்ற தங்கை பிருதுவியின் தடங்களைத் தொட்டுத்தொடர்கிறோம்

.. தமிழீழம் தேடிய அவளது கனவுகளோடு …..

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

கலைமகள் 05.07.2015

About ehouse

Check Also

மாவீரர் தவபாலன்

அன்று மே மாதம் 15ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 12மணி இருக்கும்.அப்பா நாங்கள் இருந்த கூடாரத்தை நோக்கி ...

Leave a Reply