வீரசிங்கம் இரத்தினகுமார் என்ற இயற்பெயரில் அழைக்கப்பட்ட எழில்கண்ணன் மாஸ்டர் என்றால், போராளிகள் மட்டுமல்ல சாளை தொடக்கம் செம்மலை வரையான சிறுவர்கள் பெரியவர்கள் என மக்கள் எல்லோருக்கும் நன்கு அறியப்பட்ட ஒருவர். அது மட்டுமல்ல வடமராட்சி கிழக்கு, மன்னார் மாவட்டத்தின் சில கரையோரக் கிராமங்களில் இன்றும் இவர் நாமத்தை மனதினில் சுமக்கின்றனர் எமது மக்கள். எனக்கு மூன்று வயதாக இருக்கும் போதே, தான் நேசித்த மக்களுக்காக வாழ்ந்து மாவீரர் ஆனார். ஆனால் அவரின் புகழ் இன்றுவரை வாழ்ந்துகொண்டு தானே இருக்கின்றது.
எனது அப்பாவை பற்றி வந்த ஒரு பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
***
எந்தப்படகு வெள்ளோட்டம் விடவேண்டும் என்றாலும் முதலில் உச்சரிக்கும் பெயர் இவருடையதுதான்.
மிராஜ் வகைப் படகுகள், கட்டுமானத்தில் அதன் வெள்ளோட்டத்தின்போது அதில் எத்தனை போராளிகளை ஒரே தடவையில் ஏற்றிவரமுடியும் என தலைவர் பரீட்சித்துப் பார்க்கும்படி கூறியிருந்தார். முதலில் 30 போராளிகளை ஏற்றிக்கொண்டு ஓடிப்பார்த்து, பின்னர் மேலும் முப்பது போராளிகளை ஏற்றிப் பார்த்து ஓடிய எழில்கண்ணன் ஒரே தடவையில் ஒரு போராளி தனது உடமை மற்றும் தனது சிறியரக AK வகை ஆயுதம் உட்பட மொத்தமாக நாற்பது போராளிகளை ஏற்றியெடுக்க முடியும் என பரிந்துரைத்தார்.
அதுபோன்று முதன் முதலில் ஸ்ரெல்த் எனப்படும் சிறிய வேகப் படகுக்கான வெள்ளோட்டத்தை செய்து, அவர் கொடுத்த தரவுகளையே தலைவருக்கு அனுப்பி வைத்தோம். அதுதான் எழில்கண்ணன்.
பின்னாளில் அவர் ஒரு படகுக் கட்டளை அதிகாரியாகவும், பொறியியலாளனாகவும், அதன்பின் படகு கட்டுமானத்துறை பொறுப்பாளனாகவும் கடற்தாக்குதல் அணியின் பொறுப்பாளராகவும் கடற்தாக்குதல் தளபதியாகவும் சிறிலங்கா கடற்படைக்கு தலையிடி கொடுக்கும் ஒருவரகவும் பல கடல்புலி போராளிளை உருவாக்கும் ஆசனாகவும், அலைமீது தன் பயணத்தை தொடந்தார்.
ஆனையிறவு வெற்றி உரை ஒன்றில் பால்ராஜ் மாமா கூறியிருந்தார். “இந்த வெற்றிக்குக் காரணம் குடாரப்பு தரையிறக்கம் தான். ஆனால் இதைத் துல்லியமாக எதிரியின் எதிர்தாக்குதலை முறியடித்து குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்த கடற் தாக்குதல் தளபதி எழில்கண்ணனின் சாதனை சிறப்பு மிக்கது” என்றார். பின் நாளில் எங்கு தரைஇறக்கம் திட்டமிட்டாலும், அதற்கு எழிலின் ஒழுங்கு என பெயர் உண்டானது. அது மட்டுமல்ல விநியோக செயற்பாட்டில் இயற்கையின் சீற்றத்தால் இயந்திரம் இயங்க மறுத்த போது, 100 கடல்மைல்களுக்கு அப்பால் 200 குதிரைவலு இயந்திரத்தை தனது கையால் செலுத்தி கரை கொண்டுவந்துள்ளார். சக தோழர்களின் படகுகளில் கோளாறுகள் ஏற்பட்ட போதும் மாஸ்டர் வருவார், கட்டியிழுத்து சரக்குகளை கரை கொண்டு போவார் என போராளிகள் மனதில் நம்பிக்கை மிக்க தளபதியாக வலம் வந்தார்.
பின்னர் மன்னார் மாவட்ட கடற்புலிகள் தளபதியுமாகவும் உயர்ந்து விளங்கினார். மக்கள் மீதும் மண் மீதும் அளவு கடந்த பற்றுள்ள ஒரு வீரன் தன்னை எவ்வளவு உச்சத்தில் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு இவன் உதாரணம். ஏன் என்றால் கடலின் நாயகன் அலையினாசன் என வர்ணிக்கப்பட்டவன். யாழ் மாவட்டத்தின் நாரந்தனை கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். தனது 13 வயது வரை கடல் பற்றி எதுவும் அறியாதவன். ஆனால் தன்னை மாற்றிக்கொண்டான். தாயக கனவுக்காக இது இவர்களால் மட்டுமே முடியும். மன்னார் மாவட்டதின் சிறிய தீவுகள், குடாக்கள் பல சந்தர்பங்களில் பாரிய பங்கினை போராட்டத்திற்கு வகித்துள்ளது. இந்தத் தீவுகள் பற்றிய தெளிவும் அதில் எதிரியின் திட்டமிடலும் நன்கு விளங்கிக் கொண்டவர்கள் சிலர். அதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் எழில்கண்ணன். இதில் பல தாக்குதலைத் திட்டமிட்டு வெற்றியையும் ஈட்டி உள்ளார். மன்னார் மக்களின் அன்றாட நாளில் மிகவும் கெடுபிடியாக விளங்கியது எரிக்ககலம்பிட்டி சிறிலங்கா கடற்படை தளம். இது இவரின் அடுத்த இலக்கு. சரியான திட்டம், நிதானமான ஒத்திகை, பலமான நகர்வு, எதிர்பாராத கடற்படை திணறியது. ஆயுதங்கள் மீட்பு, எதிரிப்படகு தாண்டது. கடற்படையினர் சிலர் கொல்லப்பட்டனர். வெற்றிக்களிப்புடன் எழில்கண்ணன் அடுத்த திட்டத்திற்கு அண்ணனிடம் ஆசி வேண்டி வரும் வழியில்…
போர்க்களத்தில் கொல்ல முடியாத சாவு, கடல் அன்னை சீற்றதில் காவு கொள்ள முடியாத மரணம், அவன் வணங்கும் அம்மன் குடிகொள்ளும் வேப்பம் பட்சத்தில் வாகன விபத்தில் கொன்றுபோட்டது. தான் செல்லும் வழியில் எதுவும் வரலாம் என வாழ்ந்தவர்கள். தன் குடும்பம் தன் குழந்தை என இவர்கள் எண்ணியது இல்லை. தான் நேசிந்த மக்களுக்கும் மண்ணுக்கும் தன் உயிரும் உடலும் என இறுதிவரை வாழ்ந்தவர்கள். எழில்கண்ணன் இறுதியாக வழிநடத்திய அந்த அணி எழில்கண்ணன் கடல்தாக்குதல் அணியென ஈழத்தின் கடரல்பரப்பில் வலம் வந்தது.
***
இந்தப் பதிவை வாசிக்கின்ற போது, மக்களின் விடுதலைக்காக அர்ப்பணிப்போடு செயற்பட்ட எனது அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அத்துடன் என்போன்ற ஈழத்துத் தளிர்களைத் தலைவணங்குகின்றேன். பதினாறு ஆண்டுகள் கடந்தாலும் அவரின் நினைவுடன் இன்றுவரை வாழ்கின்றேன்.
– கதிரினி –

அந்த வகையில் அலைகடலை தாண்டி தரைவேங்கைகளை பக்குவமாய் தரையிறக்கிவிட்ட கடல்வேங்கை
கடற்புலி லெப்.கேணல் எழில்கண்ணன் பிரதான பங்கினை வகித்தார்.
படையணிகளை வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துவிட்டு தொடர்ச்சியாக வந்த நடைகளில் ஆயுத உணவு விநியோயகம் செய்திட தன்னால் இயன்றளவு முயற்சிகளை எடுத்தவர்.
வெற்றிகரமாக தரையிறக்கம் நடைபெற்ற இரண்டாவது_நாள் எதிரி எமது நடவடிக்கையினால் அதியுச்ச விழிப்பு நிலையினை அடைந்துவிட்டதால் ஸ்ரீ லங்கா கடற்படையினர் முழுமையான தமது பலத்தையும் மாங்கனித்தீவின் வடகிழக்கு திசையில் திருப்பிவிட்டிருந்தார்கள்.
நூறு கடல்மைல்களை துல்லியமாக அவதானிக்க கூடிய அதி நவீன இஷ்ரேல் தயாரிப்பான் “மிதக்கும்_கோட்டை”கள் போன்ற கப்பல்கள் உட்பட பல சுப்ப டோரா படகுகள்( Super Dvora)வடமராட்சி கிழக்கின் கடல் முழுவதையும் ஆக்கிரமித்தன.
காங்கேயன்துறை,திருகோணமலை கடற்படை தளங்களில் இருந்து விரைந்து வந்த எதிரியின் சுப்படோறாக்கள் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் பயங்கரத்தையும் விஞ்சியே நின்றன.
அத்தனை கடல் வியூகங்களையும் உடைத்துக் கொண்டு லெப்.கேணல் எழில்கண்ணன் தலைமையிலான படகுத் தொகுதி சுண்டிக்குளம் கடலோரம் இருந்து தன் பயணத்தை தொடர்ந்தது.
தாளையடியை அண்டிய கடலோரம் வரை வெற்றிகரமாக பெருமளவு உடன் சமைத்த உணவு, உலர் உணவு மற்றும் ராங்கி எதிர்ப்பு ஆயுதமான எஸ்.பி. ஜி 9(SPG – 9) உட்பட சில கனரக ஆயுதம் உட்பட நடைபேசி(வோக்கி)களுக்கான மின்கலம் உட்பட அந்த களத்துக்கான அத்தியாவசிய பொருள்களுடன் அந்த படகுத் தொகுதி வந்து கொண்டிருந்தது.
அபிவிருத்துயடைந்த நாடுகளின் உயர் கடற்படை பயிற்சி மற்றும் அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கடலில் நின்று கொண்டிருந்த எதிரியின் தாக்குதல் வியூகத்தினுள் ஈற்றில் அந்தப் படகு அகப்பட்டுக்கொண்டது.
#கடற்சூரியன் என புகழப்படும் இந்த வீரன் அந்த நிலையிலும் தன்னையும் படகுத்தொகுதியையும் சம நிலைப்படுத்தி தனது படகினை விடுதலைப் புலிகளினால் தரையிறக்கத்தின் மூலம் புதிதாக தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்த செம்பியன்பற்று கடற்கரையினை நோக்கி செலுத்திவிட்டிருந்தார்.
படகு தரைதட்டிய சில விநாடிகளில் மயக்க நிலையினை அடைந்தார். தலையில் ஏற்பட்ட பலமான காயமே இந்த வீரனை கோமா(Coma stage) நிலைக்கு இட்டுச் சென்றது.
படகு தொகுதிக் கொமாண்டரான லெப்.கேணல் எழில்கண்ணன் விழுப்புண் அடைந்த நிலையில் செம்பியன்பற்றில் அன்றிருந்த களமுனை வைத்தியசாலையில் எங்களால் சிகிச்சை அளிக்கப்பட்டார்.
அங்கேயே பராமரிக்கப்பட்ட எழில்க்கண்ணன் தரைப்பாதை பிடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து கட்டைக்காட்டில் அமைக்கப்பட்டிருந்த Dr.தூயவன் அவர்களின் கடமையிலிருந்த
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
உடல் தேறிய பின்னரும் பல களங்களை கண்ட இந்த எங்கள் தங்கக் கடற்சூரியன் 07.08.2006 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்பட்ட விபத்தொன்றில்
வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்”.
