Home / மாவீரர்கள் / பதிவுகள் / லெப்.கேணல் புரட்சிநிலா

லெப்.கேணல் புரட்சிநிலா

விடுதலை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் துரிதமாக வளர்ந்தவர் லெப்.கேணல் புரட்சி நிலா. அவரில் நிறைந்து கிடந்த ஆற்றல்களிற்கோ அளவே இல்லை. 1984.12.24ல் ஜெயசீலன் தம்பதிகளிற்கு வனிதா என்ற செல்லப்பெயருடன் ஒரே அருமை மகளாக கிளிநொச்சியில் பிறந்தார்.

பெற்றோரின் ஊக்குப்விப்பாலும் தனது ஆர்வத்தாலும் கல்வியில் சிறந்து விளங்கி புலமைப்பரிசு பரீட்சையில் சித்தியடைந்து.தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்தார். சிறு வயதிலிருந்தே விடுதலை தொடர்பான விழிப்புணர்வும் நாடென்ற பற்றுணர்வுடனும் வாழ்ந்தவர். 1999ல் விடுதலைப்பயணத்தில் தடம்பதித்தார். மாலதி படையணியின் யாழினி 2 பயிற்சிபாசறையில்அடிப்படைப்பயிற்சியைமுடித்து இவரதுஅறிவுக்கூர்மையால் முன்னிலை நோக்குனராக நியமிக்கப்படார்

அந்த காலப்பகுதியில் வன்னியில் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தின் மாபெரும் யெஜசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னி மண்ணையே உலுக்கிஎடுத்தது. அதனைஎதிர்கொள்ள அம்பகாமம் என்ற இடத்திற்கு இவர் ஏனையபோராளிகளுடன் அனுப்பப்பட்டார். இவரது முதற்களமானஅங்கு மிகத்திறமையான துணிச்சல் உள்ள போராளியாக இனங்காணப்பட்டார். 2000ஆண்டு காலப்பகுதியில்2ம் உலகப்போரில் நடத்தப்பட்ட நோமண்டிதரையிறக்கத்திற்கு ஒப்பானதும் தமிழீழ விடுதலைபோராட்ட வரலாற்றிலே மிகப்பெரிதானதும் எதிரிக்கு கொடுத்த பாரிய அடியுமான களங்களில் ஒன்று குடாரப்பு தரையிறக்கம்..

அங்கு தனது படையணியான மாலதிபடையணியின் பூமி நிலைகாண்தொகுதி [GPS]ஆழுனராக ஒருபகுதி அணிகளின் வழிகாட்டியாக ஓயாத அலைகள் 3 என்று பெயர்பொறித்த அச் சமரிற்கு களமிறங்கினார்.நான்குபக்க எதிரியின் முற்றுகைக்குள் பிரிகேடியர் பால்றாஜ் தலைமையில் மிகச்சிறப்பாக சிறிலங்கா இராணுவத்தின் தொடர்ச்சியான முன்னேற்ற நடவடிக்கையை ,எதிர்கொண்டு உணவுக்கும் தட்டுப்பாடான,குடிப்பதற்கும்,குளிப்பதற்கு நீர் கிடைக்காத வசதியற்ற இடத்தில் சாதனை படைத்த போராளிகளில் இவரும் ஒருத்தி.

அசைக்கமுடியாத இரும்புக்கோட்டை என்று சிறிலங்கா இராணுவத்தால் வர்ணித்த ஆனையிறவுக் கோட்டையை இந்த பெட்டிச்சமர் ஊடாக மீட்டெடுக்கப்பட்டது.இந்த வெற்றி உலகமெங்கும் பேசப்பட்ட வெற்றியாகும்.இந்த களத்தை முடித்துக்கொண்டு ஓயாத அலைகள் தொடர்ச்சி யாழ்ப்பாணம் வரை நீண்டது. தனங்கிளப்பு தரையிறக்கத்தால் சாவகச்சேரி,அரியாலை ,நுணாவில் ,இப்படி விரிந்து கிடந்த களங்கள் யாவும்தனது கருவியுடன் இவர் உழைத்தார். 2001ல் அணித்தலைவர்களுக்குரிய அதிகாரிகள் கல்லூரியை முடித்து சிறிலங்கா இராணுவத்தின் மீண்டும் ஆனையிறவை மீட்பதற்கான மிகப்பெரும் முன்னேற்ற நடவடிக்கையான தீச்சுவாலைச் சமரில் இவரும் அணியோடு நகர்த்தப்பட்டு களமாடினார்.

அதன் பின் நாகர் கோவில் பகுதியின் முன்னரணிற்கு தனது கருவியுடன் எல்லை காத்தார். 2002ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் சிறிலங்கா இராணுவத்திற்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியது யாவரும் அறிந்ததே.அக்காலப்பகுதியில் படைக்குத்தேவையான அதிமுக்கியமான அறிவுகளில் வரைபடம். பூமிநிலைகாண்தொகுதி என்பனவும் அடங்கும்.இதனைக்கற்பிக்கும் ஆசானாக இவர்தேர்ந்தெடுக்கப்பட்டார்.பல அதிகாரிகள் கல்லூரியையும் ,பல முன்னிலை நோக்குனர் கல்லூரியையும் இவர் தலைமையில் நடாத்தி பல திறமையான போராளிகளை உருவாக்கினார்.

தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரனிடமும் பல பாராட்டுக்களையும் ,பல பரிசில்களையும் பெற்றுக்கொண்டார். புரட்சி கற்பித்த அதிகாரிகள் கல்லூரியில் ஒரு அணியுடன்…….. முதலாவதாக நிற்கும் கட்டை உருவம் லெப்.கேணல் புரட்சிநிலா இவ்வாறாக விடுதலைப்புலிகள் அமைப்பிலேயே நடாத்தப்பட்டவிளையாட்டுப்போட்டிகள்.கலைத்துறைப்போட்டிகள், அனைத்திலும் பங்குபற்றி அதில் வெற்றியீட்டி படையணிக்கு பெருமை சேர்த்தார்.கவிதை வாசிப்பதில் இவரை மீறியது யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழீழ தேசியத்தொலைக்காட்சியில் ,ரி.ரி.என் தொலைகாட்சியில் இவரது கவிப்பயணமும் வேறும் பல நிகழ்வுகளும் வெளிவருவதால் கூடுதலான மக்கள் போராளிகளிற்கு இவர் அறிமுகமாகினார். தமிழீழ தேசியத்தொலைக்காட்சியில் வெளிவந்த புரட்சியின் கவிப்பயண ஒளிநாடாவின் படம்……..

இதற்கு இடையே 2003ல் தமிழீழ விடுதலைபுலிகளின் பிரிவினைவாதம் துரோகி கருணாவால் ஏற்படுத்திய போது மடக்களப்பிற்கு அதனை முறியடிக்க வன்னியிலிருந்து அணிகள் நகர்த்தப்பட்டபோது புரட்சிநிலாவும் ஜி.பி.எஸ்[GPS] கருவியுடன் அணிகளின் வழிகாட்டியாக நகர்த்தப்பட்டார். அங்கு அதனை மிகச்சாதுரியமாக முறியடித்து விட்டு மீண்டும் அணிகள் வன்னிக்கு நகர்ந்தன.புரட்சியும் நகர்ந்தார்…

இந்நிழல்படம் மட்டக்களப்பில் துரோகி கருணாவின் பிரிவினைவாதத்தை ஒழிக்க சென்றபோது எடுக்கப்பட்ட படம் .சக போராளிகளுடன் இடது பக்கத்திலிருந்து 2வதாக பச்சை நிற சேட்டுடன் லெப்.கேணல் புரட்சிநிலா.
தொடரும்………………

11.08.2006ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் நோக்கிய வலிந்த தாக்குதலில் மாலதி படையணியின் சிறப்புத்தளபதியும்,விடுதலைப்புலிகளின் மகளிர் தளபதியுமான பிரிகேடியர் விதுசாவிற்கு வரைபடவியலாளராகவும் ,அவரின் மெய்ப்பாது காவலருமாக நின்று அணிகளின் நகர்விற்கு வழிசொன்னார்……

2007ம் ஆண்டு சிறிலங்கா இராணுவ நடவடிக்கை மன்னார்ப்பகுதியில் தொடங்கியபோது அங்கே மாலதிபடையணியும் பரந்த பல பகுதிகளை தக்கவைத்தது.அங்கே லெப்.கேணல் புரட்சியும் நகர்ந்தார்.இரவு பகலின்றி பலகிலோமீற்றர்கள் நடந்து அணிகளிற்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் சிறப்புத்தளபதியின் ஆலோசனையுடன் அத்தனையும் நிறைவேற்றி வைப்பார். குட்டித்தளபதியென ஏனைய தளபதிகள் மத்தியிலும், ஏனைய படையணி போராளிகள் மத்தியிலும் அழைக்கப்பட்டார்.

களத்தில் கட்டளை அதிகாரிகளிற்கு இடைவெளிகள் ஏற்படுகையில் அதனை நிரப்பிட எந்தவித சலனமின்றி ஓடோடிச்செல்வார்.போராளிகளுடன் அன்பாகவும் அவர்கள் பிரச்சனைகளை விளங்கி ஆதரவாகவும் நடந்து கொள்வதில் மிக உச்சம் இவரது பண்பு. பெரியவர்களிற்கு கொடுக்கும் மதிப்போ அளவில் கடந்தது. உருவத்திலும் ,வயதிலும் ஏனைய அதிகாரிகளை விட சிறியவர். ஆனால் ஏனைய போராளிகள் மத்தியில் பெரும் புகழுடனும் ,மதிப்புடனும்,ஆசானாகவும் செல்லப்பெயருடன் புரட்சி என்று அழைக்கப்பட்டார்.

தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மனதில் இவரது கவித்துவ ஆற்றலாலும் ,கலைத்துவ ஆற்றலாலும் முதல் முதலாக இடம்பிடித்தார். பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரனால் செல்லமாக அரசியல் என்று அழைக்கப்பட்டார் . இவ்வாறாக தேசியத்தலைவர் மத்தியில் இடம் பிடித்தவர் சக போராளிகள் மத்தியில் எப்படி நடந்திருப்பார் புரட்சி …?

களத்தில் கிடைக்கும் சிறு ஓய்வில் கவிதை எழுதி வெள்ளிநாதத்திலும்,ஏனைய விடுதலைப்புலிகளால் வெளியிடப்படும் சஞ்சிகைகளிற்கும் புலிகளின் குரல் வானொலிக்கும் தனது ஆக்கங்களை அனுப்பிவைப்பதில் தவறுவதில்லை. களத்தில் நின்றுகொண்டே அணித்தலைவர்களை உருவாக்கும் அதிகாரிகள் கல்லூரிகள் பலவற்றை இவர் நடாத்தி அவர்களுக்குரிய அத்தனை அறிவையும் புகட்டி சிறந்த அணித்தலைவர்களாக வெளியேற்றி வைத்த வரலாறு இவருக்கு நிறையவே உண்டு. பெரும் தளபதிகளிற்கு கூட இவர் கற்பித்திருந்தார். இவரின் கற்பித்தல் திறமை மிக வித்தியாசமானது.

விளங்க முடியாத அனைத்தையும் விளங்க வைப்பதில் புத்திசாலி.விளையாட்டில் என்றால் சொல்லவா வேண்டும் கட்டை உருவம் என்றாலும் கரப்பந்தில் பாய்ந்து பாய்ந்து அடிக்கையில் பார்ப்பவரை சிலிர்க்க வைக்கும் இவரது விளையாட்டு.இப்படி இப்படி புரட்சியில் நிறைந்து கிடந்த திறமைகள் ஏராளம் ஏராளம். என்னால் எழுத முடியவில்லை.தமிழீழ தொலைக்காட்சி பார்த்திருந்தால் புரட்சியை அறிந்திருப்பீர்கள். தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளிவந்த விலை என்ற படத்தில் புரட்சியும் நடித்திருந்தார்.

மாலதி படையணியால் வெளியிடப்பட்ட பாடல் ஒலிப்பேளையான வெஞ்சமரின் வரிகள், வரலாறு தந்த வல்லமை போன்ற பாடல் ஒலிப்பேளையில் அறிமுகக்குரல் கொடுத்தவரும் புரட்சியே. இப்போதும் அழியாமல் சில நிகழ்வுகள் இன்டெர்னெட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக எந்த ஓய்வுமின்றி களத்திற்குள்ளே நித்தமும் வாழ்ந்தார். மன்னாரில் தொடங்கிய இராணுவ நகர்வு இடைவிடாது தொடர்ந்து வன்னிமண்ணையே ஆக்கிரமித்தது யாவரும் அறிந்ததே.ஒவ்வொரு போராளிகளின் இழப்பிலும் ஒவ்வொரு அடி நிலத்தை இழந்துகொண்டு போனபோதும் மன ஆதங்கப்பட்டார்.

கரும்புலிகள் அணிக்கு தனது விருப்பின் படியே 2002ம் ஆண்டு விண்ணப்பித்த போது தேசியத்தலைவரால் காத்திருக்கும்படி பதில்வந்தபோது அதற்காகவே பல ஆண்டுகளாகவே காத்திருந்து அடிக்கடி கடிதம் எழுதி கரும்புலிகள் அணியில் இணைக்கும்படி தொல்லை கொடுத்தும் இவர் அதுவரைக்கும் இணைக்கப்படவில்லை. படையணி சிறப்புத்தளபதியால் இவரை அனுப்ப அனுமதிக்கவில்லை. இவரது திறமைகள் அவ்வளவிற்கு விரிந்து கிடந்தது.தமிழ் மக்களை உளப்பூர்வமாக யாசித்தார்.

எம்மினத்திற்கென்றொரு நாட்டை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற வார்த்தை இவரது உள்ளத்திலிருந்து அடிக்கடி வெளிவருபவை. விடுதலைபோராளிகளை பொறுத்தவரை ஓய்வு என்பது இறந்தபின்பு தான் என்ற கூற்றிற்கு இலக்கணம் வகுத்தவர்களில் புரட்சியும் ஒருத்தி. பல களங்களைக்கண்டு குண்டுமழைக்குள் குளித்தவர் .பல சந்தர்ப்பங்களில் உயிர்போகும் நிலையில் கூட சாதுரியமாக தப்பித்து வந்த வரலாறுகள் நிறையவே இவருக்கு உண்டு. ஆனால் இவர் உடம்பில் சன்னங்களால் விழுப்புண்கள் எதுவும் பட்டதில்லை.அடிக்கடி சொல்வார். “எனது உடம்பில் சின்னக்காயம் கூட எதுவும் இல்லை. நான் ஒரேயடியாய் போடுவன்”என்று கன்னத்தில் குழி விழ ஒரு அசத்தல் சிரிப்பொன்று சிரித்துநிற்பார்.

இவ்வாறாக தொடர்நெருப்புமழைக்குள் நின்று வாழ்ந்தவர் மன்னாரில் தொடங்கிய இராணுவ நடவடிக்கை இப்போ ஆனந்தபுரம் வரைக்கும் வந்துவிட்டது.முள்ளிவாய்க்கால் இறுதி களம்.அதற்கு குறுகிய தூர மாகத்தான் இருந்தது. அதுவரைக்கும் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிர்கள் சிறிலங்கா இராணுவத்தால் பறித்தெடுக்கப்பட்டதும்,காயப்படுத்தப்பட்டு உயிருக்காய் போராடிக்கொண்டிருப்பதும் நேரில் கண்டு கண்ணால் நீர் வழிய இதற்கு ஒரு முடிவு கிடைக்காதா? என்ற ஏக்கத்துடன் சக போராளிகளுடன் கதைத்துக்கொள்வார் லெப்.கேணல் புரட்சிநிலா .

ஆனந்தபுரத்தில் பிரிகேடியர் விதுசாவின் கட்டளை நிலையத்தில் நின்ற புரட்சிநிலா முன்னணி நிலையில் அணிகொண்டு செல்ல வேண்டிய தேவை வந்தபோது…………………………………………….. எறிகணைத்தொடர்மழைக்குள்ளும்,சீறிவரும் துப்பாக்கிச்சன்னங்கள் நடுவிலும் சிரித்த முகத்துடன் போட்டுவாறேன் என்று விரைந்து சென்றவர்… !! யாரும் நினைத்திருக்கவில்லை.. அன்றைய அவளின் புன்னகை, இறுதிப்புன்னகையென !!!!!!! அன்று நடந்தஆனந்தபுரச் சமரில் மிகத்திறமையாக அணியை நடத்திக்கொண்டிருந்தவள் எதிரியின் குண்டில் கடுமையாக காயப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டபோதும் எங்கள் புரட்சியை காப்பாற்றவே முடியாமல் போய்விட்டது….களத்திலிருந்து ஏனைய போராளிகளை விட்டுவரமனமின்றி துடித்த புரட்சி சுய நினைவு குறையும் வரையும் கூடநின்ற போராளிகளின் மனங்களைத் திடப்படுத்தி அறிவுரை சொல்லியே தனது சுய நினைவிழந்தார் .

30.03.2009 அன்று கடற்கரையின் அமைதியும் வீசிய காற்றின் துடிப்பும் வெப்பத்தைக்கக்கிய சூரியனின் கதிர்களும் உணர்விழந்ததாய் -ஏதோ புரட்சியின் இழப்பின் துயரைச்சொல்வதாய் இயற்கையே மௌனித்துநின்றது.. மண்ணுக்காக உழைக்கும் வரை உழைத்து ஏக்கத்தோடே விழிமூடிக்கொண்டார் லெப்.கேணல் புரட்சிநிலாவாக!!!!! களத்தில்…. மாலதிபடையணியின் ஒட்டுமொத்த கட்டளைப்பீடத்தின் கட்டளையதிகாரியாக தளபதியின் ஆலோசனையாளராக, வரைபடவியலாளராக, பூமிநிலைகாண்தொகுதி ஆளுனராக , படையணி ஆசானாக,கலைஞராக,சிறந்த பேச்சாளராக, கவிஞராக களத்தின் சாதனையாளியாக ,வீராங்கனையாக இவர் வாழ்ந்து தனது புகழை இவ்வுலகில் விட்டுச்சென்றார்.

தமிழீழம் என்ற தனிநாட்டுக்காகவும் ,தமிழர் உரிமைக்காகவும் உழைத்து தம்மை அர்பணித்த தியாகிகளில் புரட்சியும் ஒருத்தியாய் இன்றும் ஒவ்வொரு தமிழர் மனங்களிலும் வாழ்கின்றார். இந்த கையெழுத்து லெப்.கேணல் புரட்சிநிலாவினுடையது!!!! நண்பர்களே எனது கல்லூரி உயிர் நண்பியின் நினைவாக அவரது வரலாற்றை சிறிதாக உங்களிற்கு பகிர்ந்து கொள்ள நினைத்தேன்…….முழுதாக பதிவுசெய்தால் வாசிப்பதற்கு உங்களிற்கு சிரமம்..அதனால் சிறு சிறு பகுதியாக வெளியிட நினைத்தேன்..

செம்பகம்…..

About ehouse

Check Also

லெப். கேணல் செல்வகுமார் எளிமையான போராளி..!

செல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று ...

Leave a Reply