Home / மாவீரர்கள் / லெப். கேணல் நிரோஜன்

லெப். கேணல் நிரோஜன்

கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்றுகொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருந்திருக்கிறன.

கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திரந்து பேசுமானால் இவனைப்பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாக சொல்லியிருக்கும். ஆனால், அவை இப்போது மெளனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனது எழுதுகோல் ஏற்றுக்கொள்கிறது. தமிழீழத்தின் கடல்நீரை உங்கள் கரங்களால் தொடும்போது அந்த நீருக்குள்ளும் இந்த நிரோஜனின் கதையிருக்கும்.

1990 இல் இயக்கத்தில் இணைந்து கொண்ட அவனின் கடற்பயணம் 1992 இல் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து அவனுக்கும் இந்தத் தமிழீழக் கடலுக்கும் நெருங்கிய உறவு. அவன் புதியவனாக கடற்புலிகள் அணியில் இணைந்துகொண்டாலும் குறுகிய நாட்களுக்குள்ளேயே கடலில் நீண்டகால அனுபவமுடையவனைப்போல கடலின் நுட்பங்களைத் திறமையாக அறிந்தான். அந்த நாட்களில் அவனின் கடற்போரின் திறமையை வெளிக்கொண்டு வந்த அந்த தாக்குதல் நடைபெற்றது.

அது ஒரு சிறிய படகு. அந்தச் சிறிய படகில்தான் நிரோஜனின் கடல்வழி விநியோகம் நடை பெற்றுக்கொண்டிருந்தது. அன்று அந்தப் படகில் தரைப்படைத் தளபதி ஒருவரை ஏற்றியபடி நிரோஜன் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அந்த இரவின் இருளில் கடுதியாக ஏற்பட்டது அந்த வெளிச்சம். தளபதியால் இப்போது என்ன செய்வதென்றே புரியாத போதிலும் நிரோஜன் நிதானமாக படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அது டோறாப் படகு என்பதை தெளிவாக அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு டோறாப்படகின் ஆயுதப்பலமும், நிரோஜனின் அந்த சிறிய படகின் ஆயுதபலமும் ஒப்பிட முடியாதது, ஆனாலும் அந்தக் கடலின் சாதகங்களை அறிந்து, சர்ந்தப்பங்களையும் பயன்படுத்தி சில சிங்களப் படைகளைக் கொன்றதுடன் அந்தத் தளபதியையும் பத்திரமாக கரைசேர்த்தான். கடற்புலிகளில் அவனது திறமை வெளிப்படுவதற்கு ஆரம்பமாய் இருந்த அந்தத் தாக்குதல்தான். அதன்பின் அவன் தீயில் சங்கமிக்கும் வரை கடலில் கடற்புலிகள் சந்தித்த முக்கிய போர்களில் எல்லாம் அவன் கலந்து கொள்ளாததென்று எதுவுமேயில்லை.

1996ம் ஆண்டு ஐப்பசியில் ஒரு நாளின் அதிகாலைப் பொழுது. சுண்டிக்குளத்திலிருந்து கடற்புலிகளின் முகாமினை நோக்கி சிறிலங்கா வான்படை உலங்கு வானூர்த்திகளும் , கடற்கலங்களும் நெருங்குகின்றன. அங்கே கடற்புலிகளுக்கும், சிறிலங்காவின் தரை – கடற்படையினருக்குமிடையே சண்டை மூண்டது. இந்தத் தாக்குதலை திட்டமிட்டது சிங்களப்படை. அந்தத் திட்டத்தின்படி வெற்றி அவர்களுக்கே. ஆனால் அங்கு நடந்தது அதுவல்ல, சேதத்துடன் சிங்களம் தப்பியோடிக்கொண்டது. ஆனாலும் அது நிரோஜனின் மனதில் நீண்ட கோபத்தை எதிரிமீது ஏற்படுத்தியது. எங்களது வாசல் தேடிவரும் அளவிற்கு சிங்களம் துணிந்தமை அவனுக்குச் சினத்தை ஏற்படுத்தியது. அவன் மனம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். சிங்கம் புலியைத் தாக்குவதற்கு புலியின் குகையைத் தேடிவந்தது. இப்போது சிங்கத்தின் குகையை நோக்கி புலி சென்றுகொண்டிருந்தது.

திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கி கட்டளைப் படகில் நிரோஜன் கடற்புலிகள் அணியை வழிநடத்திக்கொண்டு முனகர்ந்து கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாகப் படகுகளும் – கரும்புலிப்படகுகளும் சென்றுகொண்டிருந்தன. அது திருகோணமலைத் துறைமுகத்தின் வாசல்; அங்கே துறைமுகத்திலிருந்து டோறாக்கள் சண்டைக்குத் தயாராக வெளியே வந்தன. கடலில் தமக்குச் சாதகமான பகுதியில் கடற்புலிகளின் படகுகள் வியூகமமைத்துக்கொள்ளச் சண்டை இப்போது பலமாக நடந்து கொண்டிருந்தது.

நிரோஜன் கட்டளைகளை வழங்கிக்கொண்டு எங்களது படகுகளின் வியூகங்களை மாற்றி மாற்றிச் சண்டைபிடித்தான். கரும்புலிப் படகுகளால் தாக்குவதற்குச் சர்ந்தப்பத்தை எதிர்பார்த்திருந்தவன் இப்போது அந்தக் கரும்புலிப் படகை டோரா ஒன்றின் மீது குறிவைத்து நகர்த்தினான். அது டோறா மீது மோதி வெடிக்க டோறா கடல்நீரின்மேல் செயலற்று நின்றது. நிரோஜனின் கட்டளைப்படகு அந்த டோறாவை நெருங்கியதும், நிரோஜன் அந்த டோராவில் பாய்ந்து ஏறிக்கொண்டான். அந்தப் படகின் பிரதான சூடுகலனான 20 மி . மிற்றர் கனரக ஆயுதத்தை துரிதமாக கழற்ற முற்பட்டான் நிரோஜன். டோறா கடல்நீரில் அமிழ்ந்து கொண்டிருந்தது.

நிரோஜன் அந்த ஆயுதத்தைக் கையாண்ட பயிற்சி இல்லாத போதும் டோறாப் படகு தாழுவதற்குள் அதைக் கழற்றிவிட வேகமாக இயக்கினான். அந்தக் கனரக ஆயுதத்தின் சுடுகுழல் இப்போது அவனது கைகளில் இருந்தது. இதே நேரம் மற்றொரு டோறாப்படகு செயலிழந்த டோறாவைக் குறிவைக்க நிரோஜனின் கட்டளைப் படகு மறுபக்கத்தால் திரும்பி அந்த டோறாவைத் தாக்க , நிரோஜன் அந்தக் கனமான சுடுகுழலுடன் கடலிற்குள்ளால் நீந்தினான். அதன் சுமை அவன் உடலை கடலிற்குள் அமிழ்த்தினாலும் அதிக கைவிடாது , நீந்திப்படகேறினான். சிங்கத்தை அதன் குகையில் சந்தித்துத் தாக்கிய திருப்தியுடன் புலி தளம் திரும்பிக்கொண்டிருந்தது.

இப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் தமிழர் தேசியப் படையின் கடற்படைத் துணைத் தளபதி அவன்.

அந்தப்பணியை பொறுப்பெற்றதிலிருந்து தமிழீழக் கடற்பரப்பில் சிங்களக் கடற்படையின் பலத்தை சிதைக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதும் , கடல் மூலமான விநியோகப் பணிகளை மேற்கொள்வதும் தான் அவனது நோக்கமாக இருந்தது.

அவன் தரையில் கழித்த நாட்களைவிட கடலிற்குள் கழித்த நாட்கள் தான் அதன் பின் அதிகமாக இருந்தது.

கடலில் விநியோகப் பணியை மேற்கொள்ளும் பொது சிங்களக் கடற்படையின் டோறாக்கள் விநியோகப் படகுகளை வழிமறிக்கும். அந்தச் சர்ந்தப்பங்களில் எல்லாம் குறைந்த படகுகளை வைத்து எதிரியின் கூடிய படகுகளைத் தடுத்துவைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வதில் வல்லவன் நிரோஜன்.

இப்படித்தான் ஓர் சர்ந்தப்பத்தில் விநியோகப் பணிகளை மேற்கொண்ட படகுடன் சிங்களக் கடற்படையின் தாக்குதலிற்குள்ளான போது 50 கடல்மைல்களிலிருந்து நிரோஜனின் இரு படகுகள் அந்த கடற்கலத்தை நோக்கி விரைகின்றன.

இடையில் அந்த இரு படகுகளையும் ஏழு டோறாக்கள் வழிமறிக்கின்றன. இப்போது நிரோஜன் அந்த கடற் சூழளுக்குகேற்றவாறு டோறாக்களை எதிர்கொள்ளத் தயாராகின்றான். “மயூரன்” படகு நான்கு டோறாக்களை எதிர்கொள்ளத் “தேன்மொழி” படகு மூன்று டோறாக்களை எதிர்கொள்கிறது.

அங்கே அந்த சிறிய படகுகள் இரண்டுமே அந்த ஏழு டோறாக்களுக்கும் போக்குக்காட்டி முன்னேறிக்கொண்டிருந்தன. இறுதியாக அந்த விநியோகப்படகுகளை மீட்டுக்கொண்டு தளம் திரும்பின கடற்புலிப் படகுகள்.

இப்படித்தான் எமது படகுகளின் பலம் குறைவானபோதும் நிரோஜனின் நிதனமானதும், சாதுரியமானதும், உறுதியானதுமான கட்டளைகள் எதிரியின் திட்டங்களைச் சிதறிப்பதுடன் கடற்புலிகளின் பணியைச் சரிவர மேற்கொள்ளவும் வழிசமைத்துக் கொண்டிருந்தது.

இந்த நாட்களில்தான் சிறிலங்காவின் அமைச்சர் ஒருவர் “யாழ்ப்பணத்தில் உள்ள இராணுவத்திற்கு கடல்வழி மூலமான வினியோகமே பலமாக உள்ளது” என்று தெரிவித்தார். இது நிரோஜனின் காதுக்களுக்கு கெட்டியதுமே சிறிலங்கா கடற்படைக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டான். அடுத்து வந்த காலத்தில் ஒரு நாள் யாழ்ப்பாணத்தை நோக்கி சிறிலங்கா கடற்படியின் கப்பற்தொகுதி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பற்தொகுதி முல்லைக் கடற்பரப்பைத் தாண்டிக்கொண்டிருக்கும் போது நிரோஜனின் கட்டளைகளுக்குக் கீழ் கடற்புலிப் படகுகள் களமிறங்கின.

மூன்று சண்டைப்படகுகளும் இரண்டு கரும்புலிப் படகுகளும் அலைகளை ஊடறுத்து மேல் நோக்கிச் சென்று அந்தக் கப்பற்தொகுதியை மேவிவந்து கொண்டிருந்தன. ஆனால் அன்றைய நாளில் எங்களது படகுகளில் பலத்தை விட பன்மடங்கு அதிகரித்திருந்தது எதிரியின் பலம். ஆறு டோறாக்கள், நான்கு படகுகளும் பாதுகாப்பு வழங்க வலம்புரிக் கப்பலும் , பபதா கப்பலும் அதனுடன் சேர்ந்து ஒரு தரையிறங்கு கலமும் சென்றுகொண்டிருந்தது. எதிரியின் பலத்திற்கு மிகக் குறைவான ஆயுதபலமும், கடற்கலங்களின் பலமும் இருந்த போதும் அசாத்தியமான துணிச்சலும், சண்டை வழிநடத்தும் தளபதியின் திட்டமிடலும் எங்கள் பக்கத்தில் அதிகமாயிருந்தது.

இப்போது எதிரியின் கப்பற்தொகுதியை இலக்குவைத்து பின்தொடர்ந்தன கடற்புலிகள். ஆனால் எதிரியிடம் அத்தனை பலமிருந்தபோதும் அவை சண்டை பிடிக்கப் பாய்ந்து வேகமாகச் சென்றுகொண்டிருந்தன. நிரோஜன் கட்டளைகளை வழங்க அந்தக் கப்பல்களை நோக்கி படகுகள் நெருங்கிக் சென்றன. வேர்கள் .காம் எங்கள் கடற்தளபதியின் வியூக அமைப்பிற்கேற்றவாறு படகுகள் எதிரியின் கப்பற்தொகுதியை நெருங்கியதும் கடற்புலிகள் தாக்குதலை தொடங்கி வைத்தனர். அவை அப்போது தொடர்ந்து சென்றுகொண்டிருந்ததால் முற்றிலும் சாதகமற்றதும், எதிரியின் வலயத்திற்குள்ளும் சென்ற கடற்புலிகளின் படகுகள்.

பருத்தித்துறைக்கு நேரே நடுக்கடலில் கடுமையாகச் சண்டை நடந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து நீண்டதூரம் சென்றுவிட்டதால் முற்றுமுழுதாகவே கடற்புலிகளின் சிறப்புத் தளபதியுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட, களத்தில் நின்றபடியே சண்டையை வழிநடத்தினான் நிரோஜன். உயர்ந்து எழுந்துவிழும் அலைகளுக்குள் நிதானமாக் நிற்கமுடியாத படகிற்குள் நின்றுகொண்டும் , சீறிவரும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு முகம் கொடுத்தான், நிதானமிழக்காது தெளிவாக கட்டளை பிறப்பித்தபடி அங்கிருந்த மூன்று படகுகளுள் ஒன்றில் நின்றான் நிரோஜன்.

அன்று எதிரியின் கப்பல்களை அழிக்காது தளம் திரும்புவதில்லையென்று உறுதியெடுத்து அவன் தன் தோழர்களுடன் சமரிட்டுக்கொண்டிருந்தான்.

இறுதியாக எதிரியின் சுற்றிலிருந்த பாதுகாப்பு கலங்களை ஊடறுத்து “பபதா” கப்பல்மீதும், “வலம்புரி” கப்பல்மீதும் கரும்புலி படகுகள் மோதிவெடிக்க அவை எரிந்தபடியே கடலில் அமிழ்ந்து கொண்டிருந்தன. அந்த நிறைவுடன் எதிரியின் முற்றுகைக்குள் இருந்த கடல் எல்லைக்குள்ளிருந்து வெற்றிகரமாகத் திரும்பின கடற்புலிப் படகுகள்,

இந்தத் தாக்குதல் முடிந்தபின் மீண்டும் விநியோகப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன கடற்புலிப் படகுகள். அந்தப் படகுகளை வழிமறித்து டோராப்படகுகள் தாக்குதலை மேற்கொள்ளத் தொடங்கியதும் கரையிலிருந்து படகுடன் விரைந்தான் நிரோஜன்.

“பிரசினையில்லை நான் கிட்டவந்திட்டன், நீங்கள் வடிவாகச் சண்டைபிடியுங்கோ” தொலைத் தொடர்புக் கருவியில் நிரோஜனின் குரல் ஒலித்ததுமே கடற்கலத்தில் சமர் புரிந்துகொண்டிருக்கும் போராளிகளுக்கு புது உத்வேகம் கிடைத்தது. அவர்கள் மூர்க்கமாகச் சண்டையிடத் தொடங்கினார்கள்.

நிரோஜன் கட்டளைகளை வழங்கியபடி சண்டை நடைபெற்ற கடற்பரப்பை நெருங்கி டோறாப் படகுகளை விநியோகப் படகிலிருந்து பிரித்துத் தாக்குதலை மேற்கொண்டான். ஆரம்பத்தில் எதிரியின் முற்றுகைக்குள் இருந்தன. எமது படகுகள், இப்போது நிரோஜனின் முற்றுகைக்குள்ளாக மாறிக்கொண்டிருந்தன டோறாக்கள்.

நேரம் கடந்துகொண்டிருக்க சண்டைநிலை எமக்குச் சாதகமாக மாறியது. டோறாப் படகொன்றை இலக்கு வைத்து நெருங்கி கனரக துப்பாக்கிச் சூடுகளை வழங்க அது செயலற்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. சண்டையிட்ட எல்லாப் போராளிகளும் நிரோஜனுடன் சேர்ந்து கடல்நடுவே உரத்துக் கூச்சலிட்டனர்.

ஆமாம் அன்று தான் ஒரு கடற்சண்டையில் ஒரு கரும்புலித் தாக்குதல் இல்லாது கனரக துப்பாக்கிச் சூட்டினால் ஒரு டோறா செயலிழக்கச் செய்யப்பட்டது. நிரோஜன் அந்த டோராவை கடலில் கைவிடவில்லை. ஏனைய டோராப்படகுகளுக்கு முகம் கொடுத்தவாறு செயலிழந்த டோறாவை எங்களது படகில் கட்டி இழுத்துவந்தான். அது இடையில் தானாகவே கடலில் முழக ஆரம்பிக்க அதிலிருந்த இராணுவ உபகரணங்கள் அகற்றப்படவும் அது நீருக்குள் முற்றாக அமிழ்ந்தது. இந்தத் தாக்குதல் மூலம் எல்லாக் கடற்புலிப் போராளிகளுக்கும் நிரோஜன் மீதும் அவன் திறமை மீதும் இருந்த நம்பிக்கை இன்னும் உச்சத்தை அடைந்தது.

நிரோஜன் கடற்புலியில் இருந்த ஏழு வருடங்களிலும் இப்படித்தான் பல சண்டைகளை தனது நிதானமான முடிவுகளாலும், நுட்பமான திட்டங்களாலும், நெருக்கடியான நேரத்தில் கூட பதட்டப்படாத செயற்பாடுகளாலும் செய்து வென்று முடித்தவன்.

கடலில் சண்டை முழும்போது கரையில் நின்று கட்டளை வழங்கும் போது அவர்கள் அவனின் திறமை மீதுகொள்ளும் நம்பிக்கையால் சண்டைகளை வழிநடத்தும் பொறுப்பு முழுமையாகவே அவனிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். அவன் வரலாற்றுக்குள் இப்படியான பல தாக்குதலகள் நிறைந்து கிடக்கிறது. அவனுக்குள்ளே தமிழீழத்தின் கடல் வாழ்ந்துகொண்டிருந்ததால் அவன் எப்போதும் கடலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தான்.

இப்படித்தான் சண்டைகளிலெல்லாம் நெருப்பாகச் சீரும் அந்த நிரோஜனின் மறுபக்கம் இந்தச் சண்டைகளைப் போல கடினமானதும் கரடுமுரடானதுமல்ல. அவனின் இதயம் மென்மையானது. ஒவ்வொரு சண்டைகளிலும் அவனுடன் படகிலிருந்து மடியும் போராளிகளின் நினைவால் சண்டை முடிந்ததும் வந்து தனியே இருந்து அழும்போதும் அவன் ஒவ்வொரு போராளிகள் மீதும் எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்பது புலப்படும். அப்போது அவனை ஒரு கடற்படைத் தளபதியாகப் பார்க்கமுடியாது. சண்டைகளின் வெற்றிகளால் அவன் மகிழ்ந்திருபதை விட இழந்த தோழர்களின் நினைவுகளால் அவன் மனம் உருகிப்போவதே அதிகம்.

அவன் சண்டைகள் இல்லாமல் முகாமில் நிற்கும்போது ஒரு சாதாரண போராளிகளுக்கும் அந்த தளபதிக்கும் எந்த வேற்றுமைகளும் கிடையாது. அந்த வேளைகளில் அவனது முகாமுக்கு சென்றால் நிட்சயமாக அவனை நீங்கள் பிரித்தறிய முடியாது. போராளிகள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அவர்களுக்குள் ஒருவனாக அவனும் நிற்பது வழமையானது விளையாட்டுக்கள் என்றால் கூட அப்படித்தான். விளையாட்டுக்களின் போது மிகவும் சுவாரசியமாக அந்த நேரத்தைக் கழிக்கும் தன்மை அவனுக்கே உரியது.

தொடர்சியாக இரவுபகலாக பணிகள் நடந்துகொண்டிருந்த நாட்களில் போராளிகளை உற்சாகப்படுத்துவதற்க்காக விளையாட்டுப் போட்டி ஒன்றை நடாத்த கடற்புலிகளின் சிறப்புத்தளபதி திட்டமிட்டபோது அவன் விளையாட்டு அமைப்பாளர் குழுவிற்குள் செல்லவில்லை. அவன் போட்டியிடும் வீரர்களின் இல்லமொன்றில் அவர்களில் ஒருவனாகச் சேர்ந்துகொண்டான். அவன் அந்தப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தலைவரிடம் பரிசும் பெற்று அந்த மகிழ்வில் தன் தோழர்களுடன் சேர்ந்து துள்ளிக்குதித்தான்.

அவனின் திறமை விளையாட்டில் மட்டுமல்ல, ஒரு கடற்படைத் தளபதிக்கு இருக்கவேண்டிய அத்தனை தகுதிகளுமே அவனிடம் திறமையான விதத்தில் காணப்பட்டது. அவன் கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளி பொறுப்பாளனாக, தொழில் நுட்பக்கல்வி பொறுப்பாளனாக , ஒரு கப்பலின் பிரதான இயந்திரவியலாளனாக என பல பணிகளைச் செய்து முடித்த பின்னரே கடற்புலித் துணைத்தளபதியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டான். ஆனாலும் இந்த இளம்தளபதி சிறிலங்காவின் கடற்படைத் தளபதி ஒருவனைவிட பன்மடங்கு உயர்ந்தவன். ஏனெனில் அவன் சண்டைகளில் வென்றது கடற்கலங்களின் அதிகரித்த பலத்தினாலல்ல. உறுதிமிக்க போராளிகளின் நெஞ்சுரத்தை துணையாக்கி தனது நுட்பமான் திட்டமிட்ட தாக்குதல்;இனால் மட்டுமே அப்படி இல்லாவிட்டால் இந்தச் சண்டையில் அவன் வென்றிருக்கவே முடியாது.
Lt-Col-Nirojan
அன்றைய தினம் 07.01.1999 அன்று , விநியோகப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தன கடற்புலிகளின் இருபடகுகள். அவற்றில் ஒன்றில் நிரோஜன் நின்றபடி படகுகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். கடலின் நடுவே இந்தப் படகிரண்டையும் பலம் பொருந்திய நான்கு டோறாக்கள் முற்றுகையிடுகின்றன. சண்டைமிக நெருக்கமாக நடந்துகொண்டிருந்தது. மாலை மங்கியபொழுதில் அந்தச் சண்டை ஆரம்பித்தபோதும் விடிசாமம் வரையும் அந்த நான்கு டோறாக்களிடமிருந்தும் தன்படகுகளை பாதுகாத்து வியூகமிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் தொலைவில் உள்ள எங்கள் கரையிலிருந்து எப்போதும் போலவே இப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் கடந்து விட்டதால் படகொன்றில் எரிபொருள் தீர்ந்து போக அந்தப் படகை நான்கு டோறாக்களும் சுற்றி முற்றுகையிட்டுக்கொண்டன. அவன் அப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை , சர்ந்தப்பத்தை சரிவரபயன்படுத்தி டோறாக்களை ஊடறுத்துப் புகுந்து தனது எரிபொருளின் பாதியை அந்த படகுக்கு வழங்கச் தேதமில்லாமல் அந்த நான்கு டோறாக்களுக்கும் போக்குக்காட்டி கரைசேர்ப்பித்தான்.

அதனால் தான் கடற்புலிகள் தளபதி சூசை அவர்கள் அவனைப்பற்றி குறிப்பிடும்போது….

“எந்தச் சிக்கலான சண்டை என்றாலும் நான் அவனிட்டையே கட்டளை வழங்கிற பொறுப்பை விட்டிடுவேன். ஏனென்றால், என்னைவிட அவன் சிக்கலான சண்டைகளில் கூட தானும் பதட்டப்படாமல், போராளிகளையும் பதட்டமடையாமல் வைத்து சண்டைபிடித்து வெற்றி கொள்வதில் திறமையாவன. இதில் அவனுக்கு நிகர் அவனேதான்” என்றார்.

இந்தத் திறமையான தளபதிதான் 07.10 1999 அன்றும் விநியோகப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விநியோகப் படகுகளை நடுக்கடலில் டோராப்படகுகள் வழிமறித்த போதும் கரையிலிருந்து தனது கட்டளைப் படகுடன் இரண்டு படகுகளையும் அழைத்துக்கொண்டு கடற்களத்தில் இறங்கினான். அன்று கடல் கொந்தளிப்பாய் இருந்தது. கடுமிருள் கடல்வெளியினையே மறைத்துக்கொண்டிருந்தது.

படகில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் காலநிலைக்குக் குழப்பத்தால் தங்களது பணியை செய்ய மறுத்துக்கொண்டிருந்ததன. நிரோஜன் தனது நீண்ட கால கடல் அனுபவத்த்தினை மட்டுமே வைத்து படகினை நகர்த்தினான்.

விநியோகப்படகிற்கு எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் படகை நகர்த்தினான். இடையில் துணைப்படகுகள் இரண்டுமே இயந்திரக் கோளாறினால் மெது மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது. அவன் அவற்றை எதிர்பார்க்காமலேயே தனது கட்டளைப் படகை மட்டுமே வேகமாக சண்டை மூண்ட பகுதிக்கு நகர்த்தினான். அன்று அவன் சிங்களப்படைக்கு எதிராக மட்டுமல்ல இயற்கைக்கும் எதிராகவும் சண்டை பிடிகவேண்டியதாயிருந்தது.

அவன் எங்களின் விநியோகப்படகுகளை நெருங்குகின்றான். அங்கே எங்களது படகைக் காணவில்லை. அது டோராவின் தாக்குதலில் சிக்கி மூழ்கியிருந்தது. ஆனால் அதில் வந்த உயிர்களுக்கு சேதமில்லை. அவை பத்திரமாக ஒரு படகில் இருந்தன அவன் அந்த திருப்தியுடன் தன் ஒரு படகை வைத்து எதிரியின் அதிகரித்த பலத்தை எதிர்கொண்டான்.

கடல் இப்போதும் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது. இருளுக்குள் டோராவின் நிலைகள் அவன் கண்களுக்குள் தெரியவில்லை. விநியோகப்படகு பத்திரமாய் கரை திரும்பிக்கொண்டிருந்தது. இப்போது நிரோஜனின் கட்டளைப் படகு எதிரியின் தாக்குதலில் செயலற்றுக் கடலில் நின்றுகொண்டிருந்தது. அவன் படகின் இயந்திரங்களை மெளனமாய்க்கிடந்தன. எப்போதும் எந்தச் சண்டையிலும் உதவியை எதிர்பார்க்காதவன் இன்று மட்டும் ….

“என்ற படகுக்குச் சேதம், முடிஞ்சா உதவிசெய்யுங்கோ…. இல்லாட்டி பிரசினையில்லை” அவனின் அந்த வார்த்தைகள் தொலைத்த் தொடர்புக்கருவியில் கேட்டதும் துணைக்குச் சென்ற படகுகள் இரண்டுமே தங்களால் இயன்றமட்டும் வேகமாக முயற்சித்து முன்னேறின. அங்கே அவர்கள் நிரோஜனின் படகை நெருங்கினார்கள். இப்போது அவர்களின் கரங்கள் தொய்ந்து போனது. கண்களால் வழிந்த கண்ணீர் உடலைவிட்டுத் துளித்துளியாய் படகுக்குள் விழுந்தது. அந்த வீரன் கடற்புலி மரபுக்கேற்ப இறுதிவரை சண்டையிட்டு தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் எரிந்துகொண்டிருந்த தோழர்களுடன் படகோடு தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தான்.

நினைவுப்பகிர்வு:- மாரீசமைந்தன்

வெளியீடு :விடுதலைப்புலிகள் குரல் 103
மீள் வெளியீடு : வேர்கள் இணையம் !

About ehouse

Check Also

மதிப்புக்குரிய தளபதி பால்ராச்

இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து ...

Leave a Reply