Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / மாவீரர் நிசாம் / சேரன்

மாவீரர் நிசாம் / சேரன்

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகப் போராடி 2009 மே18 இற்கு பிறகு மௌனிக்கப்பட்ட எமது ஆயுதப் போராட்ட வரலாறு அளப்பரிய தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் கொண்டது.எமது மாவீரச் செல்வங்கள் வியப்புமிக்க மகத்தான வீரகாவியங்களைப் படைத்தனர்.அந்த மகத்தான மாவீரர்களின் இலட்சிய வெறி கொண்ட இரத்தத்தினால் எழுதப்பட்டது தான் எமது வீரம் செறிந்த போராட்ட வரலாறு.அவர்கள் தமது மக்களுக்காகவே இரத்தம் சிந்தினார்கள்,மக்களுக்காகவே மடிந்தும் போனார்கள்.மக்கள் என்ற புனித ஆலயத்திற்கு தமது உயிர்களை காணிக்கையாக அர்ப்பணித்தார்கள்.அவர்கள் என்றும் எமது மக்களின் போராளிகள்.அவர்களின் இரத்தம் சிந்திய போராட்ட வரலாறானது எமதும் எமது மக்களினதும் வீர வரலாறு.அவர்களின் வீர வரலாற்றினை மறக்கப்படாமல்/மறக்கடிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் நாம் நினைவு கூர்ந்து ஆவணப்படுத்த வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும்.அந்த வகையில் தன் இளமைக் கால ஆசைகளைத் துறந்து இள வயதில் எமது போராட்டத்தில் இணைந்து சுதந்திரத் தமிழீழம் என்ற பெருங்கனவோடு வாழ்ந்து இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட எமது விடுதலைப் போராட்ட அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் தமிழீழ நிதித்துறையின் மூத்த உறுப்பினருமான மாவீரர் நிசாம்/சேரன் அவர்களைப் பற்றி நினைவு கூரப்பட வேண்டியது எமது கடமையாகும்.

 

யாழ் மாவட்டத்திலே கோப்பாய் பூதர்மடம் எனும் ஊரில் நிசாம் அவர்கள் அம்பிகைபாகன் விசாலாட்சி தம்பதியினருக்கு 14.03.1963 ஆம் ஆண்டு தவநேசன் எனும் இயற்பெயருடன் தவப் புதல்வனாக வந்துதித்தார்.இரு சகோதரிகள் மூன்று சகோதரர்களுடன் பிறந்த தவநேசனை வீட்டில் செல்லமாக ராசன் என அழைத்தனர்.அவரது மூத்த சகோதரன் சுகவீனம் காரணமாக இறந்து விட குடும்பத்தில் மூத்த ஆண் மகனாக மிகவும் செல்லமாக ராசன் வளர்ந்து வந்தார்.அவர் சிறுவயது முதல் படிப்பு,விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.

 

அவர் தனது ஆரம்பக் கல்வியை நீர்வேலி இந்துக் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்று க.பொ.த சாதாரணதரத்தில் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரக் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் கல்வி பயின்றார்.அவர் கணித பாடத்தில் இயல்பாகவே மிகச் சிறந்த புலமையும் ஆர்வமும் கொண்டு விளங்கியமையினால் க.பொ.த சாதாரணம் நிறைவு செய்தவுடன் தனக்கு கீழ் வகுப்புக்களில் பயின்ற மாணவர்களுக்கு கணித பாடம் கற்பித்து வந்தார்.

 

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளம் தலைமுறையின் கைகளிலேயே தங்கியுள்ளது.ஆகவே எமது இளம் தலைமுறையினரை அறிவுள்ளவர்களாகவும் ஆற்றல் மிகுந்தவர்களாகவும் பொறுப்புணர்வு கொண்டவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாய தேவை உண்டு.எனவே அதற்கேற்ற வகையில் இளஞ்சிறார்களுக்கு கல்வியூட்டக் கூடிய வகையில் அவர்களின் நலன் கருதி எமது தேசியத்தலைவரின் ஆணைப்படி தமிழீழ கல்விக் கழகம் உருவாக்கப்பட்டு கிராமம் தோறும் வகுப்புக்கள் நடாத்தப்பட்டது.அதில் ராசன் அவர்களும் க.பொ.த உயர்தரம் பயின்று கொண்டிருக்கும் போதே பகுதி நேர வகுப்புகளில் கணிதபாட ஆசிரியராக இலவசமாக மாணவர்களுக்கு கற்பித்து கொடுத்து தனது தேசத்திற்கான ஆரம்ப பணியை ஆரம்பித்தார்.

 

அவர் துடுப்பாட்ட விளையாட்டிலும்(cricket)மிகுந்த ஆர்வம் கொண்டவர்.தனது பாடசாலை துடுப்பாட்ட அணியில் சிறந்த துடுப்பாட்ட வீரனாக தெரிவு செய்யப்பட்டு மிகத் திறமையாகச் செயற்பட்டார்.பிற்காலத்தில் கட்டடப் பொறியியலாளராக(civil engineer) வரவேண்டும் என்பதே அவரது இலட்சியமாக இருந்தது.ஆனால் 1983 இல் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றும் இலங்கை அரசினால் தமிழ் மாணவர்கள் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட தரப்படுத்தலின் விளைவாக ஏற்பட்ட வெட்டுப் புள்ளிப் பிரச்சனையினால் அவரது பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வாய்ப்பானது தட்டிப் போய்விட்டது.இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
பின்பு காலத்தினது தேவை கருதியும் எமது போராட்டத்தினது முக்கியத்துவத்தையும் கருதி 1983 இல் தன்னை முழு நேரப் போராளியாக இணைத்து “சாவா 1” பயிற்சி முகாமில் பயிற்சியினை நிறைவு செய்து கொண்டு “நிசாம்” எனும் பெயர் சூட்டி வரிப் புலியாகினார்.

 

23.07.1983 இல் எமது போராட்டத்தில் பாரிய திருப்பு முனையை ஏற்படுத்திய தாக்குதலான யாழ் திருநெல்வேலித் தாக்குதல் லெப்.செல்லக்கிளி அம்மான் தலைமையில் நடாத்தப்பட்டது.அத்தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.அந்தக் காலப்பகுதியில் அது பெரும் தொகையாகும்.அத் தாக்குதல் நடவடிக்கையில் நிசாம் அண்ணாவும் லெப்.செல்லக்கிளி அம்மானுக்கு உதவியாக மிகவும் திறமையாகச் செயற்பட்டார்.

 

“களத்தில் எதிரியோடு போராடுவதுடன் மட்டுமல்லாது மக்களின் சமூக பொருளாதார வாழ்வினை மேம்படுத்துவதிலும்”எமது அமைப்பு அயராது உழைத்து வந்தது.மக்களின் அரசியல் விடுதலை மட்டுமன்றி அவர்களது சமூக பொருளாதார விடுதலையும் எமது இலட்சியம் என்பதை எமது அமைப்பு செயல் மூலம் நிரூபித்து வந்தது.அந்த வகையில் நிசாம் அண்ணாவும் லெப்.கேணல் சரா அண்ணாவுடன் இணைந்து மக்களோடு மக்களாக அர்ப்பணிப்புடன் அரசியல் பணியாற்றினார்.மேலும் கேணல் கிட்டு அண்ணா மற்றும் தியாகி லெப்.கேணல் திலீபன் அண்ணா ஆகியோருடனும் இணைந்து யாழ் கோட்டை போர் முன்னரங்கப் பகுதியில் களப்பணி புரிந்து தனது தேசத்திற்கான பணியினையாற்றினார்.

117178229_2350141285280750_840661552525021666_n

 

மேலும் அந்தக் காலப்பகுதியில் மகளிர் படையணிக்கு தேவையான வழங்கல்(அத்தியாவசியப் பொருட்கள்) பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதுடன் அவர்களுக்கான வெளி நிர்வாகப் பணிகளை செய்வது என அனைத்து உதவிகளும் செய்து வந்தார்.அத்துடன் அந்தக் காலப் பகுதியில் எமது போராட்டத்தின் நிதித் தேவை கருதி எமது அமைப்பு எமது மக்களிடம் நன்கொடையாக ஒரு பவுண் தங்கத்தை பெற்றபோது அதனை சேகரிக்கும் பணியையும் மற்றும் அதன் போது தங்கத்தை தரம் பார்க்கும் பணியையும் கற்று அப்பணியையும் திறம்பட மேற்கொண்டார்.

 

பின்பு 1987 இல் இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் எமது போராளிகள் காட்டில் மறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.அப்போது தன்னுயிரை துச்சமென நினைத்து காட்டிலிருக்கும் போராளிகளுக்கு வீடு வீடாக சென்று உணவு சேகரித்து வழங்கும் மகத்தான பணியையும் மேற்கொண்டார்.1987ஆம் ஆண்டு அவ்வாறு உணவு சேகரிக்க அக்காச்சி அண்ணாவுடன் சென்ற போது இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை இந்திய இராணுவத்தின் சிறைச்சாலையில் 1990 ஆம் ஆண்டு மாசி மாதம் வரை மூன்று ஆண்டுகள் போர்க் கைதியாக தடுப்புக் காவலில் தனது வாழ்நாளைக் கழித்தார்.அப்போது அவருடன் போர்க் கைதியாக நிதித்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவும் ஒன்றாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.பின்பு நிசாம் அண்ணா இந்திய இராணுவம் ஈழத்திலிருந்து வெளியேறியபோது விடுதலை செய்யப்பட்டார்.

 

எமது தேசியத் தலைவர் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப்படையை உருவாக்கி மக்களுக்கான பல நன்மைகளும் பயனும் பெறக் கூடியதுமான பல உட்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.அந்தவகையில் எமது போராட்டத்துக்கான நிதியினையீட்டிக் கொடுக்கவும் எமது மக்களை பட்டினிச்சாவிலிருந்து பாதுகாக்கவும் எதிர்கால தமிழீழத் திருநாட்டுக்கு ஏற்றவகையில் நாட்டை முன்னேற்றுவதற்குரிய பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை உருவாக்கி செயற்படுத்துவதற்காகவும் எமது தேசியத் தலைவனால் பெருங் கனவுடன் 1990 ஆம் ஆண்டு தமிழீழ நிதித்துறை என்ற பிரிவு தனியாக உருவாக்கப்பட்டது.எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கு நிதித்துறையின் திட்டமிடல் செயற்பாடுகளே மிகப் பெரிய பலமாக இருந்தது.

 

இதற்குப் பொறுப்பாளராக பிரிகேடியர் தமிழேந்தி அப்பா நியமிக்கப்பட்டார்.இந்திய இராணுவத்தின் சிறைச்சாலையில் போர்க் கைதியாக தடுப்புக் காவலில் இருந்த காலத்தில் நிசாம் அண்ணாவின் திறமைகள் ஆளுமையான செயற்பாடுகளை கண்டறிந்திருந்தபடியால் தமிழேந்தி அப்பாவால் அவர் 1990 இல் நிதித்துறைப் போராளியாக உள்வாங்கப்பட்டார்.அங்கு தமிழேந்தி அப்பாவின் வலது கரமாகவும் செல்லப்பிள்ளையாகவும் அவரது அன்பான திட்டுக்கள் பாசமான அடிகள் வாங்கி அவரது எந்த வேலையென்றாலும் எதற்கெடுத்தாலும் “டேய் நிசாம்”என்று உரிமையுடன் அழைக்கப்படும் தமிழேந்தி அப்பாவின் ஒரு பிள்ளையாகவும் நிசாம் அண்ணா விளங்கினார்.பின்னர் தமிழேந்தி அப்பா தமிழ் மேல் கொண்டிருந்த மொழிப்பற்றின் காரணத்தினால் நிசாம் அண்ணாவின் பெயர் அவரால் “சேரன்” என்று மாற்றப்பட்டது.

 

பின்பு தமிழீழ நிதித்துறையில் உறுப்பினர்கள் அதிகமாகிக் கொண்டு போனபோது நிசாம் அண்ணா நிதித்துறை ஆளுகைப் பொறுப்பாளராக தமிழேந்தி அப்பாவினால் நியமிக்கப்பட்டார்.பின்னர் 1990 ஆம் ஆண்டு திரும்பவும் எமது மக்களிடம் தமிழீழ மண் மீட்பு நிதி மீளச் செலுத்தும் கடனாக பெறப்பட்டபோது அதிலும் தங்கத்தினை தரம் பார்த்தல் மற்றும் அதற்கான இடவசதி ஒழுங்குபடுத்திக் கொடுத்தல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் திறம்பட மேற்கொண்டார்.

 

1992 ஆம் ஆண்டு நிதித்துறையில் மகளிர் இணைக்கப்பட்டபோது அவர்களுக்கான வழங்கல்(அத்தியாவசியப் பொருட்கள்) பெற்றுக் கொடுத்தல், முகாம் அமைத்துக் கொடுத்தல் என வெளி நிர்வாகப் பணிகள் அனைத்தையும் கவனித்தார்.அனைத்து பெண் போராளிகளையும் தனது சொந்த சகோதரிகள் போல நினைத்து பெயர் கூட சொல்லிக் கூப்பிடாமல் “தங்கச்சி” என அன்பாக உரிமையுடன் அழைப்பார்.இதனால் எல்லா பெண் போராளிகளும் நிசாம் அண்ணாவை ஒரு மூத்த சகோதரன் போல நினைத்து தமது தேவைகளை உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொள்ளுவார்கள்.

 

பின்பு நிதித்துறையானது ஆயப்பகுதி,வருவாய்ப்பகுதி,வழங்கல்பகுதி,கணக்காய்வுப்பகுதி,வாகனப் பகுதி,தளவமைப்புப்பகுதி,உடமைப்பகுதி, தமிழீழ போக்குவரவுக்கழகம், பெருந்தோட்டப்பகுதி,விவசாயப்பண்ணைகள், தையல்பகுதி, ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரி,நகைத் தொழிலகம், உணவு வழங்கல்பகுதி போன்றனவும் மற்றும் வாணிபங்களான சேரன் வாணிபம்,பாண்டியன் வாணிபம்,சோழன் வாணிபம்,மருதம் வாணிபம்,நகை வாணிபம்,கால்நடை வாணிபம் ,இன்னும் பல வாணிபங்கள் மற்றும் வாகன திருத்த நிலையங்கள் பின்பு 1994 இல் தமிழீழ வைப்பகம் என பல பிரிவுகளை உள்ளடக்கி படிப்படியாக விரிவாக்கம் கண்டது.

 

இவற்றின் விரிவாக்கத்திற்கும் பாரிய வளர்ச்சிக்கும் திட்டமிடல் செயற்பாடுகளுக்கும் நிசாம் அண்ணா பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் வலது கையாக இருந்து உறுதுணையாக செயற்பட்டு அவற்றிற்கான முழு நிர்வாகப் பணிகளினை மேற்கொண்டார்.அத்துடன் யாழ் உயர் தொழில்நுட்பக் கல்லூரியிலும் கணக்கியல் பகுதி நேரக் கற்கைநெறியினையும் மேற்கொண்டார்.மேலும் முகாம்களில் நடாத்தப்படும் வர்த்தகம்,கணக்கியல் தொடர்பான விசேட வகுப்புக்களிலும் கலந்து கொண்டு தனது அறிவாற்றலை வளர்த்துக் கொண்டார்.முகாம்களில் நடாத்தப்படும் விசேட வகுப்புக்கள் போராளிகளின் பணிகள் தடைப்படாமல் இருப்பதற்காக பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் நடைபெறும்.இதன்போது சில சமயங்களில் நித்திரை தூங்கும் நிசாம் அண்ணாவையே காண முடியும்.பகலில் அதிக பணிச்சுமையின் காரணத்தினாலும் எந்நேரமும் தனது பணியைப் பற்றி அதைச் சரிவரச் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பதாலும் அவரது மூளையானது களைப்படைந்து வகுப்புக்கள் நடைபெறும் போது தன்னையறியாமல் தூங்கி விடும் பழக்கம் நிசாம் அண்ணையிடம் காணப்பட்டது.

 

1994 வைகாசி மாதத்தில் முதலாவது வைப்பகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது.உலகத்திலேயே காவலாளிகள் இன்றி கண்காணிப்பு கமரா ஏதுமின்றி எந்தக் கொள்ளைகளுமின்றி இயங்கிய ஒரேயொரு வங்கியென்றால் அது தமிழீழ வைப்பகம் தான்.இது மக்களுக்கு கடன் நடவடிக்கைகளுக்கான வட்டி வீதத்தை இலங்கை அரசின் வர்த்தக ரீதியிலான வங்கிகளின் விகிதங்களின் சதவீத அளவை விட குறைவான அளவையே மக்களிடம் அறவிட்டது.மற்றும் சிறுவர்களுக்கென அமுதம் தேட்டக் கணக்கு எனும் சேமிப்புக் கணக்கை உருவாக்கி தமிழில் பெயர் சூட்டுவதையும் சேமிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ் பெயர் வைக்கப்படும் சிறார்களுக்கு தாமே முதல் வைப்புத் தொகையையிட்டு சிறுவர்களுக்கான சேமிப்பு கணக்கை ஆரம்பித்து வைத்தனர்.இதிலிருந்து எமது அமைப்பு ஒரு தூர நோக்கு இலட்சியத்துடன் போராடியது என்பது புலனாகிறது.

 

இந்த முதலாவது தமிழீழ வைப்பகம் திறக்கப்பட்டபோது அதில் நிசாம் அண்ணாவின் பங்களிப்பானது அளப்பரியதாக இருந்தது. அதற்கான இட வசதிகளை ஒழுங்குபடுத்திக் கொடுத்ததுடன் அதற்கான முழு நிர்வாகப் பணிகளினையும் அவரே திறம்பட மேற்கொண்டார்.மேலும் 1994 இல் பணியாளர்களுக்கான கணக்காய்வு கற்கைநெறி பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கான முழு திட்டமிடல்,நிர்வாகப் பணிகளையும் நிசாம் அண்ணாவே மேற்கொண்டார்.

பின்னர் திருமண வயதை அடைந்தபடியால் எமது அமைப்பின் அனுமதியுடன் 1997 ஆம் ஆண்டு பெண் போராளி ஒருவரை திருமணம் செய்து 1998 இல் ஒரு பெண் குழந்தைக்கும் பின் 2002 இல் இன்னுமொரு பெண் குழந்தைக்கும் தந்தையானார்.அவரது திருமண வாழ்க்கை போராட்ட வாழ்க்கைக்கு தடையாக அமையவில்லை இன்னும் உந்துகோலாகவே இருந்தது.

 

1997 இல் அவரது வணிக நிபுணத்துவம் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் பாங்கு என்பன இனங் காணப்பட்டு நிதித்துறையால் நடாத்தப்பட்ட வடிசாலைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.பின்பு நிசாம் அண்ணாவின் விடாமுயற்சியினாலும் வணிக ரீதியிலான நிபுணத்துவத்தினாலும் வடிசாலையுடன் இணைந்து பல வணிக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.அதன் பின் சிறிய அளவில் நடாத்தப்பட்ட வடிசாலையானது இளந்தென்றல் வாணிபம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விரிவாக்கம் அடைந்தது.அதனுடன் சில இணை வாணிபங்களான மிகவும் தரம் வாய்ந்த நட்சத்திர விருந்தினர் மாளிகைக்கு ஒப்பான தளபாடங்கள்,உணவகம்,விருந்தினர் தங்குவிடுதி போன்ற வசதிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய விருந்தினர் மாளிகை,எரிவாயு வாணிபம் என்பன உருவாக்கப்பட்டது.இவ் வாணிபங்களானவை எமது போராட்டத்திற்கான பெருமளவு நிதியினை ஈட்டித் தந்தன.அதற்கான பணியினை நிசாம் அண்ணா தன்னையும் தன் குடும்பத்தையும் கவனிக்காது தனது வாணிபத்திற்கென்றே தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டார்.அதற்குச் சான்றாக நான் நேரில் கண்ட இரண்டு சம்பவங்களைக் கூறுகின்றேன்.

 

மல்லாவியில் வடிசாலை வாணிபம் இயங்கிய போது நிசாம் அண்ணாவின் வீட்டிற்கருகில் தான் எமது முகாம் ஒன்று இருந்தது.அவரின் வீடும் வடிசாலை வாணிபத்திற்கு அருகில் தான் இருந்தது.அதிகாலை 5 மணியளவில் நாம் வீதி வழியாக ஓட்டப் பயிற்சியினை மேற்கொள்ளும் போது தனது வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டியில் வாயில் பற்தூரிகையினை வைத்த படி ஒரு கையால் துவிச்சக்கரவண்டியின் கைப்பிடியை பற்றியபடி மறுகையால் பல்லினைத் துலக்கியபடி சாறமும் சேட்டும் அணிந்து வடிசாலை வாணிபத்தினை நோக்கிச் செல்லும் நிசாம் அண்ணாவைக் காணலாம்.பல்லுத் துலக்கும் நேரத்தைக்கூட மிச்சப்படுத்தி அதிகாலையில் தனது வாணிபத்தின் பணியாளர்கள் பணியினை கிரமமாக மேற்கொள்ளுகின்றார்களா என மேற்பார்வை செய்துவிட்டு பின் வீட்டுக்கு திரும்பி வந்து குளித்து ஆயத்தமாகி திரும்பவும் தன் வாணிபம் நோக்கிச் செல்வார்.

 

பின்பு கிளிநொச்சியில் இளந்தென்றல் வாணிபம் இயங்கிய போது அவரது இல்லமும் வாணிபத்திற்கு அருகே தான் இருந்தது.ஒரு நாள் நாம் அந்த வழியால் செல்லும் போது நிசாம் அண்ணா காலில் செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் அந்த சன நெருக்கடி மிகுந்த பாதையால் யோசித்தபடி தனது வாணிபம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.அதனைக் கண்டு நாம் அவரை வழி மறித்து “என்ன நிசாம் அண்ணா காலில செருப்பும் இல்லாமல் போறீங்கள்” என்று கேட்டதும் தான் திடுக்கிட்டு நின்று தனது காலைக் கவனித்து “ஐயோ தங்கச்சி வாணிபத்தின் ஒரு பிரச்சனை சம்பந்தமாக யோசித்துக் கொண்டு வந்ததில மறந்திட்டேன் “எனக் கூறி விட்டு காலில செருப்பு இல்லாததையும் பொருட்படுத்தாது வெறுங் காலுடனே நடந்து தன் வாணிபம் நோக்கிச் சென்றார்.அந்தளவுக்கு எந்நேரமும் தனது பணியையே பற்றி சிந்தித்து தன்னையும் கவனியாது எந்த ஆடம்பரமுமின்றி எளிமையாகச் செயற்படும் ஒரு உன்னதமான போராளி அவர்.

 

தனது வாணிபம் இலாபமீட்ட வேண்டும் என்ற குறிக்கோளில் எவ்வளவு சிக்கனமாக செலவுகளைக் குறைத்துச் செய்ய முடியுமோ என்று ஆராய்ந்து பார்த்து முடிவெடுத்து தான் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்.அவருக்கு கணக்கியல் சம்பந்தமான போதிய புலமை இல்லாத போதும் தனது பட்டறிவின் மூலம்(நடைமுறை அனுபவம்) நிதி நடவடிக்கைகளில் ஏற்படும் பிறழ்வுகளைக் கண்டு பிடித்து சீர் செய்யும் ஒரு தனித் திறமை அவரிடம் காணப்பட்டது.மிகவும் சாதாரணமாக அமைதியாக எளிமையாக பழகுவதற்கு மிகவும் இனிமையானவராகக் காணப்படும் அவர் பணி என்று வந்து விட்டால் பணியாளர்கள் ஏதாவது தவறிழைத்தால் மிகவும் கடுமையாக கண்டிப்பாக நடந்தது கொள்வார்.அதே நேரத்தில் சிறிது நேரத்தில் அந்தக் கோபத்தை மறந்து சமாதானமாகி அவர்களுக்கு விட்ட தவற்றின் பாரதூரத் தன்மையை விளக்கி அவர்களைத் தனது நண்பர்கள் போல தோளில் தட்டிக் கொடுத்து பழகும் பாங்கும் அவரிடம் காணப்பட்டது. தனது ஒரு சிறு தவற்றின் மூலம் எமது போராட்டத்துக்கு அவப் பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்.

 

மேலும் தனது வாணிபத்தில் பணி புரியும் பணியாளர்களின் நலனிலும் அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டிருந்தார்.பணி புரியும் ஆண் பணியாளர்களுக்காக துடுப்பாட்ட அணியினையும்(cricket)பெண் பணியாளர்களுக்காக வலைப்பந்து அணியினையும்(net ball) உருவாக்கி அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவித்து மாவட்ட ரீதியிலான போட்டிகளுக்கு அவர்களை அனுப்பி பங்குபெறச் செய்து அவர்கள் வெற்றிவாகை சூடி வருவதையிட்டு தானும் மகிழ்வார்.மேலும் பணியாளர்களின் தனிப்பட்ட நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.அவரது வாணிபத்தில் பணிபுரிந்த குடும்பத்தினரின் ஆதரவில்லாமல் மிகுந்த வறிய நிலையில் இருந்த இரண்டு பணியாளர்களுக்கு அவரது தலைமையில் திருமணத்தை நடாத்திக் கொடுத்து அவர்களின் மகிழ்ச்சியிலே தனது மகிழ்ச்சியினைக் காண்பார்.

 

பின்பு 2003-2005 ஆம் ஆண்டு சமாதான காலப்பகுதிகளில் தமிழீழ மீட்பு நிதிக்கடன் எமது அமைப்பினால் மக்களுக்கு மீளளிக்கப் பட்டது.பல இடப்பெயர்வுகளுக்குள்ளும் யுத்த பாதிப்புக்களுக்குள்ளும் தமிழீழ மீட்பு நிதிக்கடன் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாத்து (அந்த காலப்பகுதியில் கணணி முறைப்படுத்தல் வசதியற்றிருந்த படியால் பணம்,நகை வழங்கிய பற்றுச்சீட்டு வழங்கிய அடிக்கட்டைப் புத்தகங்களும் கைப்பட பதியப்பட்ட பதிவு விபரங்களும் மட்டுமே இருந்தன)பின்பு அவற்றினைக் கணணி மயப்படுத்தப்பட்ட முறையிலான நிர்வாகக் கட்டமைப்பினூடாக மீளளித்திருந்தது தமிழீழ நிதித்துறையின் சிறந்த நிர்வாக திட்டமிடல் கட்டமைப்பையே காட்டுகின்றது.

 

அதைவிட 2003 ஆம் ஆண்டு முகமாலைப் பகுதியில் தமிழீழ மீட்பு நிதி கடன் மீளளிப்பு பணி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ஒரு வெளிநாட்டு உதவிகள் நிறுவன அதிகாரி(NGO) ஒருவர் அதனைப் பார்த்து வியந்து “நான் இப்படி போராட்ட அமைப்புகளுள்ள நிறைய நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன் ஆனால் தனது சொந்த மக்களிடமே போராட்டத்துக்கு கடன் வாங்கி அதனை நேர்மையாக திருப்பிக் கொடுத்த ஒரேயொரு அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தான் பார்க்கிறேன் “என்று பாராட்டினார்.மேலும் எத்தனையோ மக்கள் பற்றுச் சீட்டினை தொலைத்தவர்கள்,பெற்றோர் இறந்து விட்ட பின்னுரித்தாளர்கள் என பல பிரச்சனைகளுடன் வந்தார்கள் அத்தனையையும் பெருஞ் சிரமங்களுக்கு மத்தியிலும் பதிவுகளை வைத்து சீராக ஆராய்ந்து கண்டு பிடித்து உரியவர்களுக்கு மீளளிக்கப்பட்டது.இதுவும் தமிழீழ நிதித்துறையின் சிறந்த நிர்வாக கட்டமைப்பையே காட்டி நிற்கின்றது.

 

இப்பணியின் முக்கியத்துவம் கருதி பெரும்பாலும் நிதித்துறைப் போராளிகளே இதில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.இதிலும் நிசாம் அண்ணாவின் பங்களிப்பு அளப்பரியது.தனது வாணிபங்களின் பணிச்சுமைக்கு மத்தியிலும் இப்பணியிலும் ஈடுபட்டு தங்கம் தரம் பார்த்தல் மற்றைய நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திக் கொடுத்தல் என எல்லாவற்றிலும் தனது பங்களிப்பை திறம்பட மேற்கொண்டார்.

 

மேலும்,அந்தக் காலப்பகுதிகளில் எமது போராட்டத்துக்கான வணிக நிதி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளில் கப்பல் மூலம் வணிக நடவடிக்கைகள், மற்றும் வேறும் பல வணிக நடவடிக்கைகளுக்காக வெளிப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்படுவதுண்டு.அவர்கள் சில நேரங்களில் விரோதிகளின் காட்டிக் கொடுப்புகள் மற்றும் பல காரணங்களினால் அந்தந்த நாட்டு அரசாங்கங்களினால் பிடிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் தடுப்புக் காவல்களில் வைக்கப்படுவதுண்டு.அதனால் அவர்கள் விடுதலையாகி வரும் வரை அவர்களின் குடும்பத்தினருக்கான நிதி உதவிக் கொடுப்பனவுகள் தமிழீழ நிதித்துறையினாலேயே வழங்கப்பட்டன.அப்பணியையும் நிசாம் அண்ணாவே திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி செவ்வன மேற்கொண்டார்.

 

பின்பு சமாதான காலம் முடிந்து போர் மேகங்கள் மூண்ட போது அவரது வாணிபங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து விசுவமடு,புதுக்குடியிருப்பு போன்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தனது வாணிபங்களையும் பணியாளர்களையும் இடம் நகர்த்தி ஒன்று சேர்த்து ஒழுங்குபடுத்தி சீரமைத்து தனது பணியினை மேற்கொண்டார்.

 

முள்ளிவாய்க்கால்,நந்திக்கடல் இறுதி வரை எமது நிதித்துறையின் செயற்பாடானது மக்களுக்கு பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது.அதற்கு முக்கிய காரணகர்த்தாக்களில் நிசாம் அண்ணாவும் ஒருவர்.நிதித்துறையால் ஊர்திகளில் பொருத்தப்பட்ட நடமாடும் அரிசி ஆலை மூலம் நெல்லிலிருத்து அரிசி குத்தியெடுத்து கஞ்சி காய்ச்சி இறுதி வரை மக்களிற்கு வழங்கப்பட்டது.மேலும் ஊர்திகளில் பொருத்தப்பட்ட நடமாடும் வெதுப்பகங்கள் மூலம் காயப்பட்ட மக்கள்,போராளிகளுக்கு வெதுப்பியும் காயப்பட்ட குழந்தைகளுக்கு வெதுப்பியில் மாஜரீன்,சீனி சேர்த்து ஒரு ஊட்டச் சத்து உணவு போலவும் வழங்கப்பட்டது.இவற்றில் நிசாம் அண்ணாவின் பங்களிப்பு போற்றுதற்குரியதாக இருந்தது.இராணுவத்தினரின் அத்தனை கொத்துக் குண்டு வீச்சுக்கள்,எறிகணை மழைகள்,விமானக் குண்டு வீச்சுக்களுக்கு மத்தியிலும் தனக்கு ஏற்படப் போகும் உயிராபத்தை பற்றி சிந்திக்காது தனது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் மட்டும் ஒரு உன்னதமான போராளியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.மேலும் தன் வாணிபப் பணியாளர்களை ஒழுங்கமைத்துக் கொண்டு போர் முன்னரங்கப் பகுதிகளுக்கு பதுங்கு குழி அமைத்தல்,உணவு வழங்கல் போன்ற பணிகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டார்.

 

இறுதியில் 13.05.2009 அன்று, அவரது கையில் வாணிபத்தின் பணமானது மிகவும் சொற்பமான தொகை மட்டுமே காணப்பட்டதால் கடைசியாக நின்று பதுங்கு குழி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க அது காணாத படியால் முள்ளிவாய்க்கால் பகுதியில் அவரது வாணிபத்திற்கு சொந்தமான ஒரு பாரவூர்தியில் இருந்த உணவுப் பொருட்களை விற்று அதன் மூலம் வரும் பணத்தின் மூலம் பணியாளர்களுக்கான ஊதியத்தினை வழங்கலாம் என்ற எண்ணத்தில் கையில் இருந்த சொற்பமான தொகைப் பணத்தினையும் தனது மனைவியிடம் கொடுத்து தான் திரும்பி வராவிட்டால் அப்பணத்தினை பணியாளர்களுக்கு பிரித்துக் கொடுக்குமாறு கூறிக் கொடுத்து விட்டு தனது மனைவி பிள்ளைகளின் நலனைக் கூட கருத்தில் கொள்ளாது இறுதி நேரத்தில் கூட தனது பணியாளர்களின் நலன் கருதி தனது பாதுகாப்பினையும் பொருட்படுத்தாது கடும் எறிகணை வீச்சுக்குள் பாரவூர்தியை நோக்கிச் சென்ற நிசாம் அண்ணா பாரவூர்திக்கருகில் சென்றடைந்ததும் அருகில் விழுந்து வெடித்த எதிரியின் எறிகணை ஒன்றினால் தன்னுயிரினை ஈந்து ஆயிரமாயிரம் மானமாவீரர்கள் வரிசையில் இணைந்து கொண்டு மாவீரர் நிசாம்/சேரன் ஆக முள்ளிவாய்க்கால் மண்ணில் தனது இறுதி மூச்சைக் கலந்து ஈழ மண்ணை முத்தமிட்டுக் கொண்டார்.

– நிலாதமிழ் –

About ehouse

Check Also

கேணல் சங்கீதன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பிரிவின் முக்கிய தளபதியும்,புலனாய்வுக் கற்கைநெறித் துறைப் பொறுப்பாளரும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் விசாரணைப் பிரிவுப் ...

Leave a Reply